மீண்டும் லண்டனில் வடிவேலு.. செம ஸ்பீடில் நடக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட பாடல் பணிகள்!
சென்னை: லண்டனில் இருந்து நாடு திரும்பிய காமெடி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பரவிய நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.
ரசிகர்களின் அன்பு காரணமாக மீண்டு வந்த வைகைப்புயல் வடிவேலு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட பாடல் பணிகளுக்காக லண்டன் பறந்துள்ளார்.
படக்குழுவுடன் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தடை நீக்கம்
சினிமாவில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இயக்குநர் ஷங்கர் கொடுத்த புகாரின் பேரில் வழங்கப்பட்ட இந்த தடையை லைகா நிறுவனம் தலையிட்டு தீர்த்து வைத்தது. இந்நிலையில், தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்
லைகா நிறுவனம் தயாரிக்க இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் புதிய படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே தலைப்பு பிரச்சனை தலை தூக்கிய நிலையில், பேச்சுவார்த்தை மூலம் அதுவும் ஒரு முடிவுக்கு வந்தது.

லண்டனில் இசை
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். லண்டனில் இந்த படத்தின் பாடல்களுக்கான இசைப்பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வடிவேலு மற்றும் இயக்குநர் சுராஜ் சமீபத்தில் லண்டன் சென்று திரும்பி இருந்தனர்.

கொரோனா பாதிப்பு
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வடிவேலுவை தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வடிவேலு குணமடைய வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில், அவர் பூரண குணமடைந்ததாக ரசிகர்களுக்கும் மீம் க்ரியேட்டர்களுக்கும் நன்றி தெரிவித்து இருந்தார்.

மீண்டும் லண்டனில்
இந்நிலையில், இயக்குநர் சுராஜ், நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட பாடலுக்காக மீண்டும் லண்டனில் தீயாக வேலை செய்து வருவதாக லைகா நிறுவனர் சுபாஷ்கரன் அவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

நாய் சேகர் ரிலீஸ்
இது ஒருபுறம் இருக்க நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகி உள்ள நாய் சேகர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டு படத்தின் கதையும் ஒன்றா? அல்லது வேறு வேறா என தெரியாத நிலையில், நாயாக ஹீரோ மாறும் கதை தான் இரண்டு படமும் என்று கூறப்படுகிறது. முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் சதீஷுக்கு நாய் சேகர் எந்தளவுக்கு கைகொடுக்கிறது என்பது நாளை தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











