'வில்லனிடமிருந்து' மகளைக் காப்பாத்துங்க-பாக்யாஞ்சலி தந்தை புகார்
வில்லன் நடிகரிடமிருந்து என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று நடிகை பாக்யாஞ்சலியின் தந்தை போலீஸில் இன்னொரு புகார் தந்துள்ளார்.
கோட்டி, நெல்லு மற்றும் உன்னையே காதலிக்கிறேன் படங்களின் நாயகி பாக்யாஞ்சலி. இதுவரை மூன்று படங்களில் நடித்தும் வெளியில் தெரியாமலிருந்த இவரது பெயர், இப்போது பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உன்னையே காதலிப்பேன் என்ற படத்தில் வில்லனாக நடித்த வேலு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள மிரட்டுவதாகவும், ஆபாச காட்சியை செல்போனில் படமெடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாகவும் போலீசில் புகார் தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையம் வந்து வேலு உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர்.
இந்த புகார் குறித்து வில்லன் நடிகர் வேலு மறுப்பு தெரிவித்தார். உரிய நேரத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில் பாக்கியாஞ்சலிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று அவரது தந்தை போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வில்லன் நடிகர் வேலு எனது மகள் பாக்கியாஞ்சலியை கடந்த சில மாதங்களாக தொந்தரவு செய்து வந்தார். திருமணம் செய்துகொள் என்று மிரட்டினார். அவள் எங்கு சென்றாலும் அங்கே வந்து விடுவார்.
படப்பிடிப்பு தளம் என்றாலும் சரி, ரெயில் நிலையம் என்றாலும் சரி எப்படியாவது தெரிந்து கொண்டு வந்து மிரட்டுகிறார்.
இதனால் நிம்மதியே போய்விட்டது. என் மகளுக்கு தற்போது புதிய பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. வேலு மிரட்டலால் அது பாதிக்கப்படுகிறது. எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வேலுவை கைது செய்ய வேண்டும்...", என்றார்.


Click it and Unblock the Notifications











