மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்- ரத்தக் கட்டு அகற்றப்பட்டது
மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நடிகை மனோரமா சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு குளியலறையில் தடுமாறி விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு விட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அது உறைந்து போயிருந்தது. இதையடுத்து அதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் தீர்மானித்தனர். அதன்படி இன்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது தலையில் ஏற்பட்டிருந்த ரத்த உறைவுக் கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அவரது நிலை மேம்பட்டுள்ளதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் மனோரமா குடும்பத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனோரமா நல்ல சுய நினைவுடன் இருப்பதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓரிரு நாளில் அவர் வீடு திரும்பி விடலாம் என்று டாக்டர்கள் கூறியிருப்பதாகவும் மனோரமாவின் மகன் பூபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனோரமாவை நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஏற்கனவே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












