தியேட்டர்களில் பார் வைக்க அனுமதி கேட்கும் உரிமையாளர்கள்

அரசும், தியேட்டர்களுக்கும், திரையுலகினருக்கும் வண்டி வண்டியாக சலுகைகளை அளித்துக் கொண்டுதான் உள்ளது. அப்படியும், இன்னும் தேவை என்ற பாட்டைத்தான் இரு தரப்பினரும் பாடி வருகின்றனர்.
இப்போது தியேட்டர் உரிமையாளர்கள் மது பான பார்களை தியேட்டர் வளாகத்தி்ல் வைத்துக் கொள்ள அனுமதி கோரியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
தியேட்டர் தொழில் பல்வேறு காரணங்களால் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. அவற்றில் தற்போது 1,400 தியேட்டர்கள் தான் உள்ளன. அதில் 400 தியேட்டர்கள் மூடிக்கிடக்கிறது. தியேட்டர் அதிபர்கள் பிழைப்பு நடத்துவதே கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே தியேட்டர்களில் மதுபான பார் திறக்க அனுமதி அளித்தால் அதன் மூலம் சிறிதளவு வருமானம் ஈட்ட முடியும். அரசுக்கும் அதனால் வருவாய் கிடைக்கும் என்றார் அவர்.
அரசு அமைத்துள்ள சினிமா சீரமைப்பு குழுவினரிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
பார் திறக்க சரத் எதிர்ப்பு..
தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது நல்ல முடிவல்ல என்றார்.
அதேபோல அபிராமி தியேட்டர் வளாக உரிமையாளர் அபிராமி ராமநாதனும் இதை எதிர்த்துள்ளார்.
'கொம்பான' படத்தைப் பார்க்க வந்து படம் சரியில்லாமல் கடுப்பில் ரசிகர்கள் எழுந்து வீட்டுக்குச் செல்வதை தடுத்து மது பார்களுக்கு இழுத்து அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் யோசிக்கிறார்களோ என்னவோ..!


Click it and Unblock the Notifications











