இளம் இயக்குநர்கள்-பாரதிராஜா பூரிப்பு

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இதில் தலைவராக பாரதிராஜா உள்பட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக விழா சென்னை கோடம்பாக்கம் அஞ்சுகம் அம்மையார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவை டைரக்டர் ஆர்.சி.சக்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவிற்கு டைரக்டர் கே.பாலசந்தர் தலைமை தாங்கினார். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பாலச்சந்தர் பேசியதாவது:
இயக்குநர்கள் சங்கத்திற்கு பாரதிராஜா தலைமையில் மிகவும் அருமையான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாரதிராஜா பதவியேற்றவுடன் டைரக்டர் சங்கத்திற்காக முதல்வர் கருணாநிதியிடம் பேசி இடம் வாங்கியுள்ளார். இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் அந்த இடத்தில் மிகப்பெரிய கட்டிடத்தைப் பார்க்க முடியும். இது மிகப் பெரிய விஷயம் என்றார்.
இயக்குநர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
35 ஆண்டு சினிமா சரித்திரத்தில் இப்போதுதான் முதன்முறையாக 1,200 பேர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கியூவில் நின்று விண்ணப்பம் பெற்றிருக்கிறார்கள். இதுவே சங்கத்தின் எழுச்சியை காட்டுகிறது.
இனிமேல், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தமிழ் படங்களில் பணிபுரிய முடியும்.
இந்த நிபந்தனை உடனடியாக அமலுக்கு வருகிறது. வரும் பொங்கல் முதல் உதவி இயக்குனர்களுக்கு சங்க வழியில் சம்பளம் வழங்கப்படும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஏற்புரையாற்றிய பாரதிராஜா பேசியதாவது:
இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அருமையான இளைஞர்களை கொண்ட நிர்வாகிகளை நாம் பெற்றிருக்கிறோம். அந்த இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பது, அவர்களுடைய சமுதாய அக்கறையை சுட்டிக் காட்டுகிறது.
இன்றைய இளம் டைரக்டர்கள் தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுக் கொண்டிருக்கின்றனர். டைரக்டர்கள் சங்கத்திற்கு இந்த 2 வருடத்தில் எல்லா பணிகளையும் செய்து முடிப்போம் என்றார் பாரதிராஜா.
இந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர்கள் சங்க பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன், துணைத்தலைவர்கள் விக்ரமன், சசிமோகன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பொதுச்செயலாளர், ராதாரவி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் பெப்சி விஜயன், பொதுச்செயலாளர், உமாசங்கர் பாபு, பொருளாளர் டி.ராஜேந்திரன், சினிமா விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











