திரைத்துறையினர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல-நீதிமன்றம்

'விமர்சனம் என்பது காரணத்துடனும், கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும். அது ஒருதலைபட்சமாக இருந்தால் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திரைத்துறையினர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது நினைவில் கொள்ள வேண்டும்', என சிவகாசி பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 'சிவகாசி' பட விவகாரத்தில் நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அந்த வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்த 'சிவகாசி' படம், கடந்த 2005-ல் வெளியானது. இப்படத்தில் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தாக, எதிர்ப்பு எழுந்தது.
இதனால் மாநிலம் முழுவதும் நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகிய 3 பேர் மீது 17 வழக்குகள் வழக்கறிஞர்கள் சார்பில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் வழக்கறிஞர் தொழிலை மதிப்பதாகவும், திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி அளித்த தீர்ப்பு:
சுதந்திரப் போராட்டக் காலத்தில் வழக்கறிஞர்கள் பலர் தங்களது தொழிலைத் தியாகம் செய்துவிட்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினர். மகாத்மா காந்தி, முதலாவது கவர்னர் ஜெனரல், முதலாவது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரும் வழக்கறிஞர்கள் தான்.
அதுமட்டுமல்ல சாமான்ய மக்களுக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர்கள் ஒரு கருவியாக செயல்பட்டு வருகின்றனர்.
விமர்சனம் என்பது காரணத்துடனும், கட்டுப்பாடுடனும் இருக்கவேண்டும். அது ஒருதலைபட்சமாக இருந்தால் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணத்தில் செயல்படக்கூடாது. நினைத்ததையெல்லாம் காட்சியாக வைக்கலாம் என்று கருதக்கூடாது. இவ்வாறு செய்தால் மக்கள் மனதை எளிதாக பாதிக்கும். தற்போது டி.வி.யிலும் இதுபோன்ற நிலை உருவாகி வருகிறது.
அவதூறு வழக்கை எவர் வேண்டுமானாலும் தொடர உரிமை உண்டு.
சினிமா, டிவிக்களில் ஒளிபரப்பாகும் காட்சிகளில் அவதூறு, சித்தரிக்கப்பட்ட, ஆபாச காட்சிகள் இடம் பெறுவதைத் தடுக்க முறையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இப்போதுள்ள சினிமாடோகிராப் சட்டம் மற்றும் கேபிள் டிவி (ஒழுங்குப்படுத்தும்) சட்டம் 1995-ல் முறையான திருத்தம் கொண்டு வர வேண்டும்.
திரையரங்குகள், உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வித கண்காணிப்பு இல்லாமல் ஒளிபரப்பாகின்றன. சமூகம் மாசுபடுவதை தடுக்க மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவதூறு வழக்கில் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருப்பதால் நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு, ஏ.எம்.ரத்னம் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன," என்றார்.


Click it and Unblock the Notifications











