ரஹ்மானுக்கு பாராட்டு விழா-கருணாநிதி தலைமை

மார்ச் 28-ம் தேதி நடக்க உள்ள இந்த பாராட்டு விழாவில் தமிழகத்தின் அனைத்துத் துறை பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.
ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு இரட்டை ஆஸ்கர் வென்று வந்த ரஹ்மானுக்கு, அப்போதே பாராட்டு தெரிவித்திருந்தார் கலைஞர். அப்போது முதுகுத் தண்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்விலிருந்தார். முழு நலத்தோடு நேற்று வீடு திரும்பி முதல்வர், இந்த பாராட்டு விழா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் தேநீர் விருந்து!
இந்நிலையில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்தளித்து கவுரவித்தார் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.
இந்த விருந்தில் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரினாபேகம் உள்பட ரகுமானின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
ஏஆர் ரஹ்மானுக்கு பொன்னாடையும், நினைவுப்பரிசும் வழங்கி கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கவுரவித்தார். கவர்னரின் மகள் அம்ரீத்சந்து, ரகுமானின் தாயாருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
ரஹ்மானை பாராட்டி கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பேசும்போது, "இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதை பெற வேண்டும் என்று நாம் அனைவரும் வேண்டினோம். நினைத்தபடி நடந்து விட்டது. அவர் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். இது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று குறிப்பிட்டார்.
கவர்னர் அளித்த விருந்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்தார்.
"நான் இதற்கு முன்பு கவர்னர் மாளிகை அருகே உள்ள தர்காவிற்கு முன்பதிவு பெற்று அடிக்கடி வந்து செல்வேன். இப்போது இங்கு வந்து செல்ல இலவச பாஸ் கிடைத்துள்ளது. இதை ஒரு வரப்பிரசாதமாகவே நினைக்கிறேன்", என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்சாண்டர், ஒரிசா மாநில முன்னாள் கவர்னர் எம்.எம்.ராஜேந்திரன், அவரது மனைவி சுசீலா, ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











