திருப்பதியிலிருந்து திரும்பும்போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்

நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். வேண்டுதல் நிறைவேற மொட்டை போட்டார். பின்னர் தனது தங்க நகைகளை காணிக்கையாக கோவில் உண்டியலில் போட்டார்.
அதே நேரம், திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை ஒதுக்கவில்லை என்ற கோபத்தில் நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார். 1000 படங்களில் நடித்த, சிறந்த நடிகை விருது வாங்கிய தனக்கு அந்த தகுதி இல்லையா என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.
தரிசனம் முடிந்தபிறகு நேற்று அதிகாலையில் காரில் சென்னை திரும்பினார்.
தமிழக எல்லையில் உள்ள கீர்த்தளம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்வதற்காக டிரைவர் காரை திருப்பினார்.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் நடிகை மனோரமாவும் அவருடன் வந்தவர்களும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். கிராம மக்கள் விரைந்து வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் மனோரமா காயம் அடைந்தார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
பின்னர் சென்னை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











