நடிகை ரம்பா கர்ப்பம்!
கனடா தொழில் அதிபர் இந்திரகுமாரை சில மாதங்களுக்கு முன் மணந்த நடிகை ரம்பா, இப்போது கர்ப்பமாக உள்ளார்.
உழவன், உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், அருணாச்சலம் உள்பட பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் முதல் நிலை நாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர். தமிழ் படங்களில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் போஜ்புரி ஆகிய மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
'திரி ரோசஸ்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததால், ரம்பாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. அதன்பிறகுதான் அவர், போஜ்புரி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில், விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரகுமாரைச் சந்தித்த ரம்பா, அவருடன் காதலில் விழுந்தார். உடனே, ரம்பாவுக்கு திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி திருப்பதியில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 11-ந் தேதி சென்னையில் நடந்தது.
ரம்பா, கணவர் இந்திரகுமாருடன் வெளிநாடுகளில் தேன்நிலவு கொண்டாடினார். சுமார் ஒரு மாத காலம் தேன்நிலவை கொண்டாடிவிட்டு, இருவரும் சென்னை திரும்பினார்கள். அதன்பிறகு ரம்பா சென்னையில் தங்கியிருந்தார். அவருடைய கணவர் கனடாவுக்கும், சென்னைக்கும் இடையே அடிக்கடி பறந்து வர்த்தகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ரம்பா இப்போது கர்ப்பமாகியுள்ளார். அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் அறிந்ததும், கணவர் இந்திரகுமார் சென்னை வந்து, ரம்பாவை கனடாவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
ரம்பாவுக்கு, அடுத்த வருடம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











