சிரஞ்சீவி சினிமா ஸ்டைலில் தொடையை தட்டினால் கடப்பாவில் எடுபடாது-ரோஜா

கடப்பா எம்.பியாக இருந்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது மீண்டும் அதே தொகுதியில் ஜெகன்மோகன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து ரோஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை பேய் என்று கூட சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.
இதற்காக அவர் ரூ. 500 கோடி வரை வாங்கி உள்ளார். பணத்திற்காக தனது கொள்கைகளையும், மானத்தையும் அடகு வைத்து விட்டார்.
இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.
பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.
அவரது கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும்போது பாதி பேர் வேறு கட்சிகளுக்கு தாவி விடுவார்கள்.
ஆந்திர மக்கள் தொடக்கத்தில் இருந்தே சிரஞ்சீவியை நம்பவில்லை. இனியும் நம்ப மாட்டார்கள் என்றார் ரோஜா.


Click it and Unblock the Notifications











