கடை திறப்பு விழாக்களுக்கு முக்கியத்துவம் நடிகைகளை புறக்கணிக்க வேண்டும் - தாசரி ஆவேசம்

ஹைதராபாத்: நகைக் கடை திறப்பு, ஜவுளிக் கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, சினிமா விழாக்களைப் புறக்கணிக்கும் நடிகைகளை இனி சினிமா உலகமும் புறக்கணிக்க வேண்டும், என்றார் இயக்குநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவ்.
ஹைதராபாத்தில் "வம்சி" விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விருதுகள் பெற நடிகைகள் யாரும் வரவில்லை. இவ்விழாவில் தாசரி நாராயணராவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். விருது வாங்க யாருமே வராதது அவரைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
அவர் பேசுகையில், "கதாநாயகிகள் சினிமாவில் சம்பாதிக்கின்றனர். அதோடு துணி கடை, நகை கடைகள் திறப்பு விழாக்களுக்கும் போகிறார்கள். அதற்கும் பணம் வாங்கிக் கொள்கின்றனர். ரூ 15 லட்சம் முதல் 1 கோடி வரை வாங்குகிறார்கள். இந்த சம்பாத்தியத்துக்கெல்லாம் காரணம் சினிமாதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
அதனால்தான் இது போன்ற விருது வழங்கும் விழாக்களுக்கு அழைத்தால் வருவது இல்லை. இது போன்ற நடிகைகளிடம் திரையுலகினர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பணத்துக்காக கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும் கதாநாயகிகளை புறக்கணிக்க வேண்டும். திரைப்பட விழாக்களுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. சினிமா துறையில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நடிகைகள் உணர்வது இல்லை," என்றார்.
தாசரி நாராயணராவுக்கு இன்று 66வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











