என் மருமகன் ஹரி பின்னால் ஒரு சமுதாயமே இருக்கு!-விஜயகுமார்

ஹைதராபாதில் மனைவி மஞ்சுளாவுடன் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்பட்ட விஜயகுமார், நேற்று சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், "வனிதா ஒருநாளைக்கு ஒரு கதை சொல்கிறாள். என் மகன் அருண் விஜய் அவள் கழுத்தைப்பிடித்து நெரித்ததாக பொய் புகார் கொடுத்து இருக்கிறாள். அருண் விஜய் எங்கள் உறவினர் ஒருவரின் அறுபதாம் திருமண நிகழ்ச்சிக்காக தனது மனைவி, குழந்தை, மாமனார், மாமியாருடன் அமெரிக்கா போய் இருக்கிறான்.
அதற்காக அவன் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஆன் லைன் மூலம் விமான டிக்கெட் பதிவு செய்து இருக்கிறான். நவம்பர் 22-ந் தேதி அவன் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றான்.
ஆனால் வனிதா நவம்பர் 23-ந் தேதி அன்று தன் கழுத்தை அருண் விஜய் நெரித்ததாக புகாரில் குறிப்பிட்டு இருக்கிறாள். விமானத்தில் பறந்தவன் எப்படி இவள் கழுத்தை நெரித்து இருக்க முடியும்?
இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என் கை மணிக்கட்டை ஆனந்தராஜ் அடித்து முறித்ததற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. இதையெல்லாம் தேவைப்பட்டால் போலீசாரிடம் கொடுப்பேன்.
என் மகன் அருண் விஜய்யும், மருமகன் டைரக்டர் ஹரியும் அவரவர் வேலைகளை செய்துகொண்டு, அவரவர் குடும்பங்களை கவனித்து வருகிறார்கள். கவுரவமாக இருப்பவர்கள். எனக்கு 65 வயது ஆகிறது. என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு என் மகனும், மருமகனும் அவரவர் வேலைகளை கவனித்து வருகிறார்கள். அவர்கள் இரண்டு பேர் மீதும் வனிதா அபாண்டமாக புகார் செய்து இருக்கிறாள். என் மருமகன் ஹரியின் பின்னால் பெரும் சமுதாயமே உள்ளது.
வனிதாவைப் பற்றிய உண்மைகளைச் சொன்னாள் அவளால் தாங்க முடியாது. அவளுடைய முதல் கணவர் ஆகாசுக்கு பிறந்த மகன் எங்கே இருக்கிறான்? என்று யாராவது அவளை கேட்டது உண்டா?
அந்த பையன், அவன் தந்தையுடன்தான் இருந்தான். அவனை சாலிகிராமத்தில் உள்ள ஆகாஷின் வீட்டில் இருந்து வனிதா அடித்து இழுத்து சென்று இருக்கிறாள். அந்த பையனை அவள் ஏதாவது செய்துவிட்டு, பழியை எங்கள் மீது போட்டுவிடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன்...,'' என்றார் விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











