டி.ஆர்., சிம்பு மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த திரைப்பட வினியோகஸ்தர்!

திருச்சியைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. ராமமூர்த்தி. அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் நடிகர் டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் மீது கொலை மிரட்டல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
1999-ம் ஆண்டு மோனிசா என் மோனலிசா சினிமாவுக்கு, 'குறைந்த பட்ச உறுதி' அடிப்படையில், டி.ராஜேந்தர் எனக்கு ரூ. 31 லட்சம் பாக்கி வைத்துள்ளார். மீதிப்பணத்தை கேட்ட போது டி.ராஜேந்தர் தர மறுத்தார்.
இது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படம், சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயரில் வெளியிட முயற்சி செய்யப்பட்டது.
கடன் பாக்கிக்காக அந்த படத்திற்கு, உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சித்தேன். அப்போது ராஜேந்தர் பணத்தை தர ஒப்புக் கொண்டதால், அம்முயற்சியை கைவிட்டேன்.
அதன் பின் சிம்பு நடித்த படங்களான 'விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் வானம்' ஆகியவற்றை சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயரில் வெளியிடாமல் மற்ற பேனரில் வெளியிட்டனர். 'வானம்' படம் வெளியான போது ராஜேந்தரை அவரது வீட்டுக்கு சென்று பார்த்தேன்.
அப்போது அவரும் அவரது மகன் சிலம்பரசனும் என்னை மிரட்டி, விரட்டி அடித்தனர். மேலும், 'ஆட்சியே எனக்கு சாதகமாக உள்ளது. மீடியாவும் என் கையில் உள்ளது. உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, உன்னை காலி செய்து விடுவேன் ஓடி விடு' என ராஜேந்தர் மிரட்டினார்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், ஏற்கனவே தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும், கடந்த 3-ம் தேதி ராஜேந்தர் என்னை சமரசம் பேச, அவரது வீட்டுக்கு அழைத்ததன் பேரில் அவரை சந்திக்கச் சென்றேன்.
அப்போது அவரது மகன் சிலம்பரசன், என்னை கொன்று விடுவதாக மிரட்டி, விரட்டினார். மேலும், 'கேஸ் தானே போட்ட, அங்கேயே போய் பணத்தை வாங்கிக் கொள்' என்றும் கூறினார்.
எந்த ஆட்சி வந்தாலும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி எனது முகத்தில் அறைந்து வெளியே தள்ளினார்.
இவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பணத்தை மீட்டுத் தருவதுடன், எனக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











