முல்லைப் பெரியாறு... கேரள நடிகர்கள் போராட்டம்!

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும், புதிய அணை கட்டவும், கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவை திரட்டி வருகிறது. போராட்டங்கள் நடத்தவும் தூண்டப்படுகிறது.
கேரளாவில் தமிழகத்தில் இருந்து சென்ற அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் மலையாள திரையுலகமும், போராட்டத்தில் குதித்துள்ளது. மலையாள நடிகர்- நடிகைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். கேரளா உயர் நீதிமன்றம் அருகில் நேற்று இரவு இப்போராட்டம் நடந்தது.
இதில் நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இன்நோசென்ட், இயக்குனர்கள் கமல், உன்னி கிருஷ்ணன் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.
மலையாள நடிகர் சங்கம், மலையாள திரைப்பட தொழிலாளர் சங்கம், மலையாள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம், போன்றவை இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
இதில் கலந்து கொண்டவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு அமைதியான முறையில் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர். கேரள மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பிரச்சினை தீர வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
நடிகர்களில் சிலர் அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்டி அதன் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்றனர்.


Click it and Unblock the Notifications











