பாலிவுட்டில் புழங்கும் 'அண்டர்வேர்ல்டு தாதாக்கள்' கறுப்புப் பணம்!
மும்பை: சட்டவிரோதமாக தாங்கள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை மறைமுகமாக பாலிவுட் படங்களில் முதலீடு செய்வதாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் தாதாக்கள் பல கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவர்கள் பெரிய தொழில் அதிபர்கள், முன்னணி நடிகர்- நடிகைகள், சினிமா பிரமுகர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் மும்பையில் சினிமா நட்சத்திரங்கள் தங்களுக்கென்று தனியாக பாதுகாப்பு ஊழியர்களை நியமித்துக் கொள்வது சகஜமாக உள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறான். ஆனால் அவனது கூட்டாளிகள் இன்னும் மும்பையில் இருந்து கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடு படுகிறார்கள். இவர்களில் சிலர் இந்திப் படங்களில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். தாதாக்கள் கையில் பல கோடி பணம் புரள்கிறது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள், நிலங்கள் என தாவூத்தின் பணம் பாய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட்டில் இந்த கறுப்பு பணம்தான் திரைப்படங்களாக வெள்ளையாகின்றன என்பது தெரியவந்துள்ளது.
தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் பெயரில் படங்கள் எடுக்க இந்த தாதாக்கள் பணம் தருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பல மும்பை தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளில் வெளி நாட்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் சினிமா படங்களில் தாதாக்கள் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது.
இதேபோல் சில அரசியல்வாதிகளும் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை சினிமா படங்களில் முதலீடு செய்து வெளியே கொண்டு வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் மத்திய அரசுக்கு தெரிந்திருந்தும் அதை தடுக்க முடியவில்லை. சட்ட விரோத பண முதலீடு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியாரிடம் கடன் பெற்று படம் எடுக்கும்போது 100 சதவீதம் வரை வட்டி வசூலிப்பதாகவும், இந்த அண்டர்வேர்ல்டு டான்கள் குறைந்தவட்டிக்கு தருவதால் கறுப்புப் பணத்தை இரு கரம் நீட்டி வரவேற்கிறது பாலிவுட் என்று திரையுலகினர் சிலர் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











