கோவா படத்துக்கு தடை நீங்கியது!

கோவா என்ற படத்தை தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார் ரஜினி மகள் சௌந்தர்யா.
இந்தப் படத்தைத் தயாரிக்க வருண்மணியன் என்பவரிடம் பைனான்ஸ் ரூ.1.60 கோடி கடனாகப் பெற்றிருந்தார் சௌந்தர்யா.
கடனை சொன்னபடி சௌந்தர்யா திருப்பிச் செலுத்தாததால், வருண் மணியன் கோர்ட்டுக்குப் போனார். கோவா படத்தைத் திரையிட தடை வாங்கினார்.
இதை எதிர்த்து சௌந்தர்யாவின் மேனேஜர் கார்த்திக் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில், கோவா படம் தயாரிப்பதற்காக வருண் மணியன் கடன் கொடுக்க வில்லை. படத்தை தயாரிக்க அவரும் முதலீடுதான் செய்திருந்தார். அதை உடனே திருப்பி கேட்டார். ஆனாலும் இந்த பணத்தை திருப்பி கொடுக்க வங்கி உத்தரவாதம் தருகிறோம். எனவே படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
நீதிபதி ராஜசூரியா இதை விசாரித்து படத்துக்கான தடையை நீக்கி உத்தர விட்டார். 21-ந்தேதிக்குள் வங்கி உத்தரவாதத்தை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறினார்.
விசாரணை...
இதற்கிடையே, வருண் மணியனுக்கு மர்ம நபர்கள் சிலர் விடுத்த கொலை மிரட்டல் மற்றும் வீடு புகுந்த காரை அடித்து நொறுக்கியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











