பார்..இரண்டு படும் தியேட்டர்காரர்கள்!!

தியேட்டர்களில் பார் வைக்க அனுமதிக்க வேண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் (குசேலன் விவகாரத்தில் போர்க்கொடி தூக்கியவர்கள்) முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பெரும்பாலான திரையரங்க நிர்வாகிகள் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் திரைரங்கு சங்க துணைத் தலைவர் ஜெயகுமார், கூடுதல் செயலாளர் எம்.வி.ராமு, பொருளாளர் பழனியப்ப செட்டியார் ஆகியோர் முதவர் கருணாநிதிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் அவர்கள் எழுதியுள்ளதாவது:
எங்கள் சங்கத்தில் இருந்து சிலர் தியேட்டர்களில் பார் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வருக்கு வைத்திருப்பதாக செய்தி அறிந்தோம். எந்த கோரிக்கையும் பொது மகாசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும். தனி நபர் கருத்தாக இருக்கக்கூடாது.
தியேட்டர்களில் பார் வைக்கவேண்டும் என்பது குறித்து பொதுக்கருத்து எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதுகுறித்து அனைவரிடமும் பேசப்படவுமில்லை. உண்மையில் பெரும்பாலான திரையரங்குகள் அருகில் கூட பார்கள் இருக்க கூடாது என்றே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே பார் வைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது, என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
குடும்பங்கள் வருவதே நின்றுவிடும்!
இதற்கிடையே, தியேட்டர்களில் பார்களை அனுமதித்தால் குடும்பத்துடன் யாரும் தியேட்டருக்கு வருவே மாட்டார்கள். இந்நிலை உருவாக அனுமதிக்கக் கூடாது என சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.
சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் அபிராமி ராமநாதன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் தியேட்டர்களில் பார் வைக்க அனுமதித்தால் குடும்பங்களாக வருபவர்கள் தியேட்டர்களுக்கு வருவதையே நிறுத்தி விடுவார்கள். குடித்து விட்டு வருபவர்கள் தியேட்டர் உள்ளே இருக்கைகளையும் கெடுத்து விடுவார்கள்.
எனவே தியேட்டர்களுக்கு உள்ளே பார் வைக்க அனுமதிக்கவேண்டாம் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
திரையரங்கு அருகில் பார்கள் இருக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். பொது இடங்களில் குடிப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Click it and Unblock the Notifications











