ரோஜா பேச்சு: தெலுங்கு தேசம் அலுவலகத்துள் சிரஞ்சீவி கட்சியினர் ரகளை!

சமீபத்தில் ஐதராபாத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நடிகை ரோஜா. அப்போது அவர் பவன் கல்யாணை, 'கள் குடித்த குரங்கு மாதிரி இருக்கிறார்' என்று வர்ணித்தார். மேலும் முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு பல பெண்களுடன் சுற்றுவதாகவும் கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு சிரஞ்சீவி கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பவன் கல்யாணை விமர்சனம் செய்ததற்கு ரோஜா மன்னிப்பு கேட்க வேண்டும், என்று கோரி வருகிறார்கள்.
ஆனால் ரோஜா மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதை வெளிப்படையாக பத்திரிகையாளர்களிடம் கூறிய அவர், நான் தவறாக எதுவும் பேசவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார் ரோஜா.
இதனால் ஆவேசம் அடைந்த சிரஞ்சீவி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் உள்ள தெலுங்குதேசம் தலைமை அலுவலகமான என்.டி.ஆர்.டிரஸ்ட் பவனுக்கு எதிரே திரண்டனர். பின்னர் அவர்கள் ரோஜாவுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார்கள்.
திடீரென பிரஜா ராஜ்யம் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்தனர். உடனே அங்கிருந்த தெலுங்குதேசம் தொண்டர்கள் சிரஞ்சீவி கட்சி தொண்டர்களை வெளியேறும்படி எச்சரித்தனர். அவர்கள் வெளியேற மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சிரஞ்சீவி கட்சியினர் உருட்டுக் கட்டைகளால் தாக்க, பல தெலுங்கு தேசம் தொண்டர்கள் காயமடைந்தனர். பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











