'அட்டாக்': கோர்ட்டில் வடிவேலு சாட்சியம்!

சென்னையை அடுத்த சாலிகிராமத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி, பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, வீட்டிற்கு நடிகர் வடிவேலு வந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் முன் சில கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றை அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனால் அவரது அலுவலகத்தை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து நொறுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மாரிமுத்து போலீசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக, நடிகர் விஜயகாந்த்தின் உதவியாளர் சதீஷ்குமார் உள்பட 11 பேர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான விசாரணை சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு, மாஜிஸ்திரேட்டு பெஞ்சமின் ஜோசப் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் வடிவேலு, அவரது உதவியாளர்கள் மாரிமுத்து, சுரேஷ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
நடிகர் வடிவேலு தனது சாட்சியத்தில் கூறியதாவது:
2007-ம் ஆண்டு எனது பிறந்த நாளின் போது, இரவு சினிமா ஷூட்டிங் முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தேன். அப்போது வாசல் முன் சில கார்கள் நிறுத்தி இருந்ததை கண்டு என்ன என்று விசாரித்தேன். அப்போது நடிகர் விஜயகாந்த் உறவினர் இறந்துவிட்டதால் வாகனங்கள் நிறுத்தி உள்ளதாக கூறினார்கள். உடனே அலுவலகம் முன் உள்ள கார்களை அகற்ற கூறினேன்.
இதைத்தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து நடிகர் விஜயகாந்த் உதவியாளர் சதீஷ்குமார் தலைமையில் 30-க்கும் அதிகமானவர்கள் வந்து அலுவலப கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இது பற்றி போலீசில் புகார் செய்தேன் என்றார்.
விசாரணையின்போது, நடிகர் விஜயகாந்த் உதவியாளர் சதீஷ் குமார் உள்பட 13 பேரும் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் அரசு தரப்பு வக்கீல் பன்னீர் செல்வம் விசாரணை நடத்தினார்.
சதீஷ்குமார் சார்பில் அவரது வக்கீல்கள் நமோநாராயணன், பெரியசாமி ஆகியோர் ஒரு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதில், வழக்கில் உள்ள சாட்சிகள் அனைவரும் சாட்சியம் அளித்த பின்தான், குறுக்கு விசாரணை செய்வோம் என்று கூறி இருந்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பெஞ்சமின் ஜோசப், வழக்கு விசாரணையை, வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











