எக்கோ நிறுவனத்தில் அதிரடி சோதனை... ரூ 25 லட்சம் சிடிக்கள் பறிமுதல்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது பெரும்பாலான படங்களின் இசையை இசைத் தட்டுகள், கேசட்டுகள் மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடும் உரிமையை எக்கோ நிறுவனத்துக்கு கொடுத்திருந்தார் இளையராஜா.
ஆனால் அந்த நிறுவனமோ இளையராஜாவுக்கு தரவேண்டிய ராயல்டி தொகையை தரவில்லை என்று இளையராஜா புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்த எழுத்துப் பூர்வமான மனுவை சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார்.
இசையமைப்பாளரான தனக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராயல்டியாக மட்டுமே பல கோடி ரூபாயை எக்கோ நிறுவனம் தரவேண்டியுள்ளதாக இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் விமலா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி 2 சட்டப் பிரிவுகளின் கீழ் எக்கோ நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தார்.
இதையொட்டி, நேற்று முன்தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏவி.எம். மியூசிக் ஸோன், சரஸ்வதி ஸ்டோர் என்ற கடையில் சோதனை நடந்ததாகவும், அனுமதி பெறாமல் விற்பனைக்கு வைத்திருந்த ஆடியோ சினிமா பாடல் சி.டி.கள் 179 பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள். அதே நாளில் எக்கோ நிறுவனத்திலும் சோதனை நடத்தி 10 மாஸ்டர் பிரிண்டுகளைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக கோபாலபுரத்தில் உள்ள எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணிக்கு மேலும் சோதனை நீடித்தது. உதவி கமிஷனர் விமலா, இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராமு ஆகியோர் போலீஸ் படையோடு சென்று இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஆடியோ சினிமா பாடல் சி.டி.களை ஒரு லாரி நிறைய பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அத்தனையும் அனுமதி பெறாத சி.டி.கள் என்றும் போலீசார் கூறினார்கள். இதேபோல, மேலும் சில நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











