சக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார்! - தொழிலதிபர் பதில் புகார்

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்திசிதம்பரம் சமீபத்தில் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மீதும், அவரது அண்ணன் மகன் தினகரன் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். 'எந்திரன்' படம் விநியோகத்தில் தினகரன் தன்னுடன் பங்குதாரராக செயல்பட்டதாகவும், ஆனால் அந்த படத்தின் கணக்குவழக்குகளை ஒப்படைக்காமல் மோசடி செய்துவிட்டார் என்றும், திருவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கிவிட்டு பணம் தராமல் அபகரித்துவிட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பதில் புகார்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொழில் அதிபர் வி.எஸ்.ஜே.தினகரன் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், 'எந்திரன்' படம் வெளியிட்டதில் படஅதிபர் சக்திசிதம்பரம்தான், எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் தரவேண்டும் என்றும், அதற்காக 'காவலன்' படம் விநியோக உரிமையை தருவதாக கூறினார் என்றும், பின்னர் காவலன்' படம் விநியோக உரிமையை தரவில்லை என்றும், சக்திசிதம்பரத்திடமிருந்து ரூ.1 கோடியே 60 லட்சத்தை வசூலித்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவள்ளூரில் நிலம் வாங்கியதில் எனக்கு சம்பந்தமும் இல்லை என்றும், எனது புகழை கெடுக்க பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்றும் மனுவில் தினகரன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











