போரை நிறுத்தாமல் சோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம் - பாரதிராஜா

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் சிவகாசியில் நேற்று காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.
இதில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர். சுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினர்.
பாரதிராஜா பேசுகையில்,
அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.
இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன்சிங் வாய் அசைப்பார். இலங்கை ராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது.
அதனால் தான் அவரை சார்ந்தவர்களை லட்சக்கணக்கில் இலங்கை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.
போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.
1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம் என்றார் பாரதிராஜா.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,
தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம்.
நமது ராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். இரண்டரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார்.
முத்துக்குமாருக்கு இரங்கல்..
சென்னையில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் இறந்து நேற்றுடன் 100 நாட்களானது. இதையடுத்து நேற்றைய கூட்டத்தின்போது ஒரு நிமிடம் மெளன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











