ஜீவாவின் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் மனைவி - தாய்!

பிரபல ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திகழ்ந்தவர் ஜீவா. அனீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் தாம் தூம் ஷூட்டிங்குக்காக ரஷ்யா சென்றபோது மாரடைப்பால் ஜீவா மரணமடைந்தார்.
இறந்தவிட்ட ஜீவாவுக்கு சனா (12), ஆல்பா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து அண்ணா நகரில் உள்ள ஜீவாவின் வீட்டில் அனீஸ் வசித்தார்.
ஜீவாவுக்கு உத்தண்டியில் 11 கிரவுண்டில் நீச்சல் குளத்துடன் பண்ணை வீடு, அடையாறு போட் கிளப் பகுதியில் ஆயிரம் சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற சொத்துக்கள் உள்ளன.
மயிலாப்பூர் லஸ் சர்ச் 2வது தெருவில் உள்ள ஸ்ரீநிகேதன் அப்பார்ட்மென்டிலும் அவருக்கு ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில்தான் அவரது அம்மா சுலோச்சனா (74), தங்கை மாதவி ஆகியோர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், மயிலாப்பூரில் உள்ள வீடு குறித்து அனீஸூக்கும் ஜீவாவின் தாய் சுலோச்சனாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு வந்த அனீஸ் மற்றும் சிலர் கேட் கதவை உடைத்து உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் இருந்த சுலோச்சனா, மாதவி ஆகியோரை வெளியே இழுத்து போட்டுவிட்டு கதவை உள்பக்கமாக அனீஸ் பூட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே...
அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் போலீசுக்கு சுலோச்சனா தகவல் கொடுத்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராணி அங்கு வந்தார். கதவை திறக்கும்படி அனீஸிடம் கூறினார். ஆனால், வீடு என் பெயரில் உள்ளது. அது எனக்கு சொந்தம் என்று கூறி கதவைத் திறக்க மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி அவர் திரும்பிவிட்டார். அதனால் இரவு முழுவதும் வீட்டு வாசலிலேயே சுலோச்சனா தங்கியிருந்தார்.
அடியாட்களுடன் வந்து தன்னை அடித்து, உதைத்து வெளியே தள்ளியதாக அனீஸ் மீது புகார் கூறினார் ஜீவாவின் தாய்.
இந்நிலையில், தன்னையும், மகள் மாதவியையும் தாக்கியதாக மயிலாப்பூர் போலீசில் சுலோச்சனா நேற்று காலை புகார் செய்தார்.
அதேபோல் நேற்று மாலை போலீஸ் இணை கமிஷனர் குணசீலனிடம், அனீஸ் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், மயிலாப்பூரில் உள்ள வீடு என் பெயரிலும், கணவர் பெயரிலும் உள்ளது. ஆனால், மாமியார், நாத்தனார் பங்கு கேட்கின்றனர். நீதிமன்றத்திலும் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.
இயக்குநர் வசந்த் தூண்டுதலா?
ஆனால் இயக்குனர் வசந்த், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோரது தூண்டுதலின் பேரில் ஆட்களைக் கூட்டி வந்து எங்களை சுலோச்சனா மிரட்டுகிறார். இதனால் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
இந்த இரு புகார்கள் மீதும் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்த மாநகர் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











