தசாவதாரம்-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்திற்குத் தடை கோரி ெசன்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தசாவதாரத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் இந்த அப்பீல் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், தசாவதாரம் படம் இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது. சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான மோதலை சித்தரிப்பதாக இந்தப் படம் அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளை, குறிப்பாக 50 கோடி வைணவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது.
இந்தப் படத்தை திரையிட அனுமதித்தால் நாட்டில் சட்டம், ஓழுங்கு பிரச்சினை உருவாகும். எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையேயான மோதலை சித்தரிக்கும் காட்சிகளையும், மத உணர்வுகளை புண்படுத்தும் வேறு சில காட்சிகளையும் நீக்க உத்தரவிட வேண்டும்.
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. அதுபோல எந்தவொரு படமும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தவும் அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தசாவதாரம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் தங்களது கருத்தை கேட்காமல் தீர்ப்பளிக்கக் கூடாது என்பதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்களின் கருத்தை அறியாமல் தசாவதாரத்திற்கு இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் பிறப்பிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











