'மதுரையில் திரைப்பட கல்லூரி வேண்டும்'
சென்னை: மதுரையில் அரசு திரைப்பட கல்லூரியே அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மதுரையில் அரசு திரைப்படக் கல்லூரி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த செய்தி-ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதிஇளம் வழுதி,
இந்தியாவிலேயே 3 திரைப்படப் பயிற்சி கல்லூரிகள்தான் உள்ளன. புனே, கொல்கத்தா ஆகிய இடங்களில் மத்திய அரசு சார்பில் திரைப்பட பயிற்சி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் மட்டும்தான் தமிழக அரசின் சார்பில் கல்லூரி நடத்தப்படுகிறது. புதிதாக திரைப்பட கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் 15 முதல் 20 ஏக்கர் நிலமும் ரூ. 25 கோடி பணமும் தேவைப்படும். சென்னை திரைப்பட கல்லூரிகளிலேயே அனைத்து வசதிகளும் உள்ளன. பல்வேறு இடங்களில் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்றார்.
அப்போது மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ நன்மாறன் எழுந்து,
திரைப்படத்துறை என்பதைப் பற்றிய வரலாற்றோடு தமிழக முதல்வரின் வரலாறு பின்னிப் பிணைந்திருப்பதை நாடு அறியும்.
தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் ஒரு ஆவலோடு ரயிலேறி இங்கு வந்து படுகிற அவஸ்தை சாதாரணமானதல்ல.
எதிர்வரும் காலத்தில் மதுரையில் அரசு திரைப்பட கல்லூரி அமைக்கப்படுவது பற்றி வெகு விரைவில் அது பரிசீலிக்கப்படும் என்ற உறுதிமொழியை தமிழக முதல்வர் வழங்கினால் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு மகுடம் சூட்டியதைப் போல் இருக்கும். எனவே முதல்வர் அந்த உறுதியை அளிப்பாரா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி,
திரைப்படத் துறையினுடைய வாழ்க்கையோடு என்னுடைய வாழ்க்கையும் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று உறுப்பினர் நன்மாறன் சொன்னார். என்னைவிட அதிகமாக என்னுடைய நண்பர் எம்.ஜி. ஆரின் வாழ்க்கைதான் திரைப்படத் துறையோடு சிகரம் வைத்ததைப்போல பின்னிப் பிணைந்து கிடந்த காரணத்தால் அவருடைய பெயரால் இங்கே இந்த ஆட்சியில் ஒரு கல்லூரி திரைப்படப் பயிற்சிக்காக ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரையிலே 'பரிசீலிக்கப்படுகிறது' என்றுதான் சொல்லச் சொல்கிறார். பொதுவாக சட்டமன்றத்திலே 'பரிசீலிக்கப்படும்' என்று சொன்னாலே அது ஏறத்தாழ இல்லையென்றுதான் அர்த்தம் என்றார்.


Click it and Unblock the Notifications











