நடிகர்களின் ஆபாச திட்டுக்கள் கருணாநிதிக்கும் சேர்த்துதான்- பத்திரிகையாளர்கள்
சென்னை: நடிகர் நடிகைகள் கண்டனக் கூட்டம் எனும் பெயரில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அரங்கேற்றிய ஆபாசப் பேச்சுக்கள், தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதிக்கும் சேரும் என்று பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிரஸ் கிளப்பில் நடந்த அவசரக் கூட்டத்தில் அனைத்துப் பத்திரிகையாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நிருபர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பலரும், "பல்வேறு ஆபாச/ நிர்வாணப் பட வழக்குகளில் சிக்கியுள்ள நடிகை ஷகீலா, இன்னும் அந்த வழக்குகள் உள்ள நிலையில் நிலுவையில் முதல்வரைச் சந்திக்கிறார், பொன்னாடை போர்த்தி தன்னை ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்.
தனது ஆபாசப் பேச்சுக்காக பத்திரிகையாளர்களால் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ள நடிகர் விவேக், அடுத்த நாளே முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது போல போஸ் கொடுக்கிறார்.
இங்கு அரசு நடக்கிறதா... அல்லது நடிகர்களின் ராஜாங்கம் நடக்கிறதா என்றே தெரியவில்லையே" என்றனர்.
மேலும், "முதல்வர் தன்னை எப்போதும் மூத்த பத்திரிகையாளர் என்று கூறிக் கொள்கிறார். இன்றும் ஒரு பத்திரிகையை நிறுவி நடத்தி வருகிறார். நடிகர் நடிகைகள் பொத்தாம் பொதுவாக எல்லோரையுமே மிகக் கேவலமாக ஆபாசமாகத் திட்டியுள்ளனர்.
இந்த ஆபாசப் பேச்சுக்கள் முதல்வரையும் குறிப்பதாக ஆகாதா... ஆனால் அவர்களுக்குதான் முதல் மரியாதையைத் தருகிறார் முதல்வர்.. ஒரு சராசரி குடிமகனோ, பத்திரிகையாளர்களோ நடிகர்களைப் போல நினைத்த நேரத்தில் முதல்வரைச் சந்திக்க முடியுமா..." என்றும் குமுறினர்.
இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சிலர் ஆவேசப்பட்டபோது, 'சட்டத்தின் முன் யாவரும் சமம், சட்டத்தை மீறியவர்கள் என்று யாருமே கிடையாது என்பதை எல்லோருக்கும் உணர்த்த, முறையான வழியில் நியாயம் கேட்பதே சிறந்தது என்று மூத்த பத்திரிகையாளர் பாலு மற்றும் பகவான் சிங் போன்றோர் கூறியதால் அனைவரும் அமைதி காத்தனர்.
நடிகர்களுக்கு சினிமா பிரஸ் கிளப் கண்டனம்:
ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும் மேடையில் கேவலமாக பேசியதையும், இழிவுபடுத்திப் பேசியதையும் கடுமையாக கண்டிப்பதாக சினிமா பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிளப்பின் தலைவர் இரா.த. சக்திவேல், செயலாளர் எம்.பி. ஆபிரகாம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் ஒரு நடிகை பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
அந்த செய்தியை விமர்சிக்கவும், கண்டனக் கூட்டம் நடத்தவும், அந்த செய்தி தவறு என்று வாதிடவும், செய்தி வெளியிட்ட பத்திரிக்கை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அவர் அவர்களின் ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.
அதற்காக இதையே, ஒரு காரணமாகக் கொண்டு, ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும், பொது மேடையில் கேவலமாக பேசுவதும், இழிவுபடுத்தி பேசியதையும், சினிமா பிரஸ் கிளப் வன்மையாக கண்டிக்கிறது.
குறிப்பாக கடந்த 7.10.2009 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய கண்டனக் கூட்டத்தில், நடிகர்கள் விவேக், சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட பலர் பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்திப் பேசியது கண்டனத்துக்குரியது.
செய்தி வெளியிட்டதற்காக பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு தொடர்வதும், அந்த வழக்கின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதும் காலம் காலமாக நடந்து வருகிற ஒன்றுதான்.
ஆனால் முதன் முறையாக ஒரு செய்தி வெளியிட்டதற்காக பெண் கொடுமை சட்டத்தில் செய்தி ஆசிரியர் ஒருவரைக் கைது செய்திருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக சினிமா பிரஸ் கிளப் கருதுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











