வடிவேல் - சிங்கமுத்து ஆதரவாளர்கள் மோதல்; பாதுகாப்பு கேட்டு பட அதிபர் மனு
சென்னை: வடிவேலு ஆதரவாளர்கள் தாக்கியதால் சிங்கமுத்துவின் ஆதரவாளரான பட அதிபர் தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே மோதல் நிலவி வருகிறது. வடிவேலுக்கு நிலம் வாங்கி கொடுத்ததில் ரூ 7 கோடிக்கும் மேல் மோசடி செய்து விட்டதாக சிங்கமுத்து மீது வடிவேலு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆதரவாளர்கள் நேற்று மோதிக் கொண்டனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் வேதவள்ளி தெருவில் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு எதிரே பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் அலுவலகம் உள்ளது.
கண்ணன் நாங்க புதுசா எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சிங்கமுத்து உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி கண்ணனின் வீட்டில் அவரது மகள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சிங்கமுத்து உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு பட்டாசு வெடித்து ஆர்ப்பாட்டமாக வரவேற்பு அளித்துள்ளார் கண்ணன்.
இதனால் தனக்கு பாதுகாப்பு கேட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் வடிவேலு.
இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பிறந்த நாள் விழாவுக்கு அவர்கள் வருகை தந்தது தெரியவந்தது. உடனே வடிவேலுவிடம் இதனை தெரிவித்தனர்.
கண்ணன் வீட்டில் கூடியவர்கள், வடிவேலுவைப் பற்றி விமர்சித்தும், கிண்டலடித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு ஒரு கும்பல் கண்ணன் வீட்டிற்கு சென்று வடிவேலுவை தரக்குறைவாக விமர்சித்து பேசியது ஏன் என்று கேட்டு கலாட்டா செய்ததாகவும், வீட்டிலிருந்தவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கண்ணனின் மாமனார் திராவிட செல்வம் காயம் அடைந்தார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கண்ணன் இன்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனக்கு வடிவேலு ஆதரவாளர்களிடமிருந்து பாதுகாப்பு தேவை என்று கூறி மனு ஒன்றை அளித்தார்.
வடிவேலு ஆதரவாளர்கள் தனது வீடு புகுந்து சொந்தக்காரர்களைத் தாக்கியதாகவும் எனவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











