ஆந்திரா-தியேட்டரில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற 6 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
ஆந்திர மாநிலத்தில் நடிகர் ராம் சரண் தேஜா நடித்த மகாதீரா படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ஆந்திராவின் விசயநகரம் மாவட்டத்தை சேர்ந்த சாலுர் பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிறுக்கிழமை விடுமுறை என்பதால் படத்துக்கு ஏகப்பட்ட கூட்டம். இதையடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு முண்டியடித்துள்ளனர். அவர்களில் சிலர் டிக்கெட் கவுன்டரில் உள்ள ஜன்னல்களில் ஏறியுள்ளனர்.
ஜன்னலில் நின்று கொண்டிருந்த ரசிகர்களில் ஒருவர் நிலைதடுமாறியுள்ளார். உடனே அவர் கீழே விழாமல் இருக்க மேலே தொங்கி கொண்டிருந்த மின்சார கம்பியை பிடித்துள்ளார். இதையடுத்து அந்த மின்சார கம்பி அறுந்து கீழே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் விழுந்து, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் 6 பேர் பலியானார்கள். இதை பார்த்த மற்ற ரசிகர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து நேற்று தியேட்டரில் படம் திரையிடப்படவில்லை.
தியேட்டரில் மின்சாரம் தாக்கி ரசிகர்கள் பலியாவது ஆந்திராவில் இது மூன்றாவது சம்பவமாகும். கடந்த வாரம் நடந்த இதே போன்ற சம்பவத்தில் வாரங்கல் மாவட்டத்தில் இரண்டு ரசிகர்களும், கர்னூல் மாவட்டத்தில் ஒருவரும் பலியாகி உள்ளனர்


Click it and Unblock the Notifications











