ஜனநாயகன் படத்தால் 100 கோடி ரூபாய் நஷ்டம்.. பிரபலம் ஓபன் டாக்.. இவ்வளவு லாஸா?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையால் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. தற்போது இந்த விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது. விரைவில் தனி நீதிபதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கவிருக்கிறார். படம் ரிலீஸாகாதது விஜய் ரசிகர்களிடையே பெரிய சோகத்தை உண்டு செய்திருக்கிறது. இந்நிலையில் அந்தப் படம் ரிலீஸாகாததால் ஏற்பட்டிருக்கும் நஷ்டம் குறித்து தெரியவந்திருக்கிறது.
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். தளபதியின் அரசியல் பிரவேசத்துக்கு பிறகு ரிலீஸாகும் படம் என்பதால் இதனை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்தார்கள் ரசிகர்கள். முக்கியமாக இதுதான் அவரது கடைசி படம் என்றும் சொல்லப்பட்டது. எனவே அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வைத்திருந்தார்கள். ஆனால் சென்சார் அதிகாரிகள் கட்டையை போட்டதால் பிரச்னை வெடித்தது.
என்ன பிரச்னை?: அதாவது படத்தில் மதத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக சென்சார் அதிகாரி ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார். அதனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். எப்படியாவது சர்ட்டிஃப்பிக்கேட்டை வாங்கிவிடுவதற்கு படக்குழுவினர் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால் மனம் இறங்கி வராத சென்சார்; சான்றிதழ் கொடுப்பதில்லை என்பதில் தீவிரமாக இருந்துவிட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு: இதனால் அதிர்ச்சியடைந்த பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. முதலில் விசாரித்த தனி நீதிபதி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் சென்சாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. சமீபத்தில் நடந்த விசாரணையில் சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்த கேவிஎன் நிறுவனத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது.
அப்செட்டில் படக்குழு: இதனால் படக்குழு மேற்கொண்டு அப்செட்டாகியிருக்கிறது. இவ்வழக்கு விசாரணை எப்போது வரும் என்றும் தெரியவில்லை. இது ஒருபக்கம் இருக்க வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் சென்சாருக்கு படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. அடுத்த முறை நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது கேவிஎன் நிறுவனம் வாபஸ் வாங்கும் முடிவில் இருக்கிறதாம். இந்நிலையில் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததால் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.
பிரபலம் பேட்டி: தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு திரைத்துறையில் பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை தரும் ரமேஷ் பாலா கொடுத்த பேட்டியில், "ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததால் தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பராசக்தி திரைப்படம் தமிழ்நாட்டில் 55 கோடி ரூபாய் வசூலித்தது. ஜனநாயகன் மட்டும் வந்திருந்தால் அப்படம் எளிதாக 150 கோடி ரூபாயிலிருந்து 200 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும்.
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. பராசக்தி மற்றும் தலைவர் தம்பி தலைமையில் படங்களால் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆஃபிஸில் 85 கோடி ரூபாய் மட்டுமே கடந்த ஜனவரியில் வசூல் ஆகியிருக்கிறது. ஜனநாயகன் வராதது பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











