ஆஸ்கருக்கு போகலனா என்ன.. மக்கள் மனதில் இடம் பிடித்த ‘ஜெய்பீம்’..100வது நாள் கொண்டாட்டம் !
சென்னை : ஜெய்பீம் திரைப்படத்தின் 100வது நாளை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமேசான் பிரைமில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ந் தேதி இத்திரைப்படம் வெளியானது.
சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்து இன்று வரை இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜெய்பீம்
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது, அதில் எளிய மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொண்டார்கள் என்கிற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

பாராட்டைப்பெற்றது
மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் இத்திரைப்படத்தில் நடித்தார்கள் என்பதை விட இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். வழக்கறிஞர் சந்துருவாக நடித்த சூர்யா மக்கள் மனதில் சந்துருவாகவே பதிந்துவிட்டார். இந்த படம் வெளியான போது பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் இத்திரைப்படம் பலரின் பாராட்டை பெற்றது.

இடம்பெறவில்லை
பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வரும் ஜெய்பீம், சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமுடம் எதிர்பார்த்த நிலையில், நேற்று ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

100வது நாள்
இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்களாகிறது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்கருக்கு போகலனா என்ன ஜெய் பீம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மனதில் என்றும் தனியிடம் உண்டு என்று சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











