1000 கோடி ரேஸில் ஜெயிலர், இந்தியன் 2, லியோ, PS 2... கோலிவுட்டின் முதல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?
சென்னை: 2023 கோலிவுட் பாக்ஸ் ஆபிஸின் மிக முக்கியமான ஆண்டாகப் பார்க்கப்படுகிறது.
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
கடந்தாண்டு விக்ரம், பொன்னியின் செல்வன், 2023 தொடக்கத்தில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தன.
இந்நிலையில், இந்தாண்டு தமிழில் இருந்து முதல் 1000 கோடி வசூல் சாதனை எந்தப் படத்திற்கு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ்
சினிமாவில் பான் இந்தியா மார்க்கெட்டிங் தொடங்கியதில் இருந்து, குறைந்தபட்சம் 500 கோடி முதல் அதிகபட்சம் 1000 கோடி ரூபாய் வசூல் என்பது தான் ஹீரோக்கள், இயக்குநர்களின் கனவாகிவிட்டது. 2016ல் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் தான் முதல் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் செய்தது. அபிஸியலாக ரூ.2070 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படும் தங்கல், 3000 கோடி வரை கலெக்ஷன் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதனையடுத்து ராஜமெளலியின் பாகுபலி 2 ரூ.1500 கோடி வரையும், ஆர்.ஆர்.ஆர் 1200 கோடி வரையும் வசூலித்துள்ளது. அதேபோல் கன்னட படமான கேஜிஎஃப் 1200 கோடியும், இந்தாண்டு வெளியான ஷாருக்கானின் பதான் ஆயிரம் கோடிக்கு அதிகமாகவும் கலெக்ஷன் செய்துள்ளது.

கோலிவுட்டின் பெரும் ஏக்கம்
இந்தி, தெலுங்கு, கன்னட திரையுலகில் ஆயிரம் கோடி வசூல் சாத்தியப்பட்டுவிட்டதால், கோலிவுட் மட்டுமே இன்னும் இந்த சாதனையை எட்ட முடியாமல் தவித்து வருகிறது. ஷங்கர், மணிரத்னம் போன்ற பிரம்மாண்ட இயக்குநர்கள் இருந்தும் இதுவரை 1000 கோடி வசூல் கைகூடவில்லை. ஆனால், கடந்தாண்டு வெளியான கமல் - லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்கள் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் இந்தாண்டு தமிழில் இருந்தும் ஆயிரம் கோடி வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்
அண்ணாத்த படத்தின் தோல்வியை ஜெயிலரில் தட்டித் தூக்க வேண்டும் என தீயாக வேலை பார்த்து வருகிறார். இயக்குநர் நெல்சனும் தன் மீது ரஜினி வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என ஸ்கெட்ச் போட்டு ஜெயிலர் படத்தை எடுத்து வருகிறார். இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்களை கவர் செய்துவிட வேண்டும் என மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என டாப்மோஸ்ட் ஹீரோக்களை ஜெயிலரில் நடிக்க வைத்துள்ளார். அதனால், ஜெயிலர் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாயகனின் இந்தியன் 2
இனிமேல் அரசியலும் பிக் பாஸ் ஷோவும் மட்டும்தான் கமலுக்கு கை கொடுக்கும் என நினைத்திருந்தவர்களுக்கு, விக்ரம் திரைப்படம் மூலம் வெறியாட்டம் காட்டினார். நெல்சனின் டைரக்ஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருந்தாலும், ஒன்மேன் ஷோ காட்டாமல் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் முதல் ஏஜென்ட் டினா வரை மற்ற நடிகர்களுக்கும் ஸ்க்ரீனில் சமமான வாய்ப்புக் கொடுத்திருந்தார் கமல். அதுவே விக்ரம் படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. விக்ரம் வெற்றியால் மீண்டும் தூசு தட்டப்பட்ட இந்தியன் 2, இன்னும் எனர்ஜியாக உருவாகி வருகிறது. கமல் - ஷங்கர் மேஜிக் சரியாக ஒர்க் அவுட் ஆனால், இந்தியன் 2 கண்டிப்பாக கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யின் ரியல் சம்பவம்
ஜெயிலர், இந்தியன் 2 படங்களை விடவும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது லியோ திரைப்படம் தான். விஜய் - லோகேஷ் கனகராஜ் என பவர்ஃபுல் காம்போவில் உருவாகும் இந்தப் படம் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய இந்தக் கூட்டணிக்கு லியோவை இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாற்றுவது பெரிய வேலையே கிடையாது. டைட்டில் ப்ரோமோவில் கெத்தாக ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் லியோ வைப்பில் தான் உள்ளனர். பெரும்பாலான சினிமா விமர்சகர்களின் கணிப்பு படி, கோலிவுட்டில் லியோ தான் முதல் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2
இதனையடுத்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. முதல் பாகமே 500 கோடிக்கும் மேல் வசூலித்ததால், இரண்டாம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் குறை வைக்காது என சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வனும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி, ஏஆர் ரஹ்மானின் இசை என பலமாக இருப்பதால் இதுவும் ஆயிரம் கோடி வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது. ராஜமெளலியின் பாகுபலி முதல் பாகத்தை விட செகண்ட் பார்ட் தான் வசூலில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது. அதே எதிர்பார்ப்பில் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உள்ளது.

ஏகே 62 - சூர்யா 42
அஜித்தின் ஏகே 62 அப்டேட் இன்னும் சில நாட்களில் வந்துவிடும். முக்கியமாக ஏகே 62 திரைப்படமும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சூர்யா நடித்து வரும் அவரது 42வது திரைப்படமும் இந்தாண்டு வெளியாகலாம். இந்தப் படங்களும் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஆயிரம் கோடி என்பது வாய்ப்பிருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி ஆகியோரின் படங்களும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. மொத்தத்தில் 2023 கோலிவுட்டின் பொற்காலமாக இருக்கும் என்றால் அது மிகையில்லை.


Click it and Unblock the Notifications











