ஆபாச நடிப்பு: மல்லிகா ஷெராவத் மீதான வழக்குக்கு தடை இல்லை-பாம்பே உயர்நீதிமன்றம்

மராட்டியத்தை சேர்ந்த சமூக சேவகர் ரஜினிகாந்த் போரிலே, பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக யவத்மால் மாவட்டம், பந்தர்காவ்டாவில் உள்ள குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 291-ன் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந் தேதி ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
தனது வழக்கு மனுவில், "'ஷாடி கே பேலே', 'மர்டர்', 'மான் கயா முகல்-இ-அஜாம்' ஆகிய படங்களில் நடிகை மல்லிகா ஷெராவத் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளார். இதனால் சமூகம், குறிப்பாக இளைய தலைமுறையினர் பாதிப்புக்கு உள்ளாவார்கள். பணம் சம்பாதிப்பதற்காகத்தான் அவர் இப்படி நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மல்லிகா ஷெராவத் ஆஜராகுமாறு பந்தர்காவ்டா நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
தடை விதிக்க முடியாது:
இந்த நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மல்லிகா ஷெராவத், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவில் மனு தாக்கல் செய்தார். மேலும் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யவும் அவர் விண்ணப்பித்தார்.
இந்த மனு நீதிபதி பிரமோத் கோடே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லிகா ஷெராவத் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார்.
அதே நேரத்தில் அவரது மனு தொடர்பாக வரும் 23-ந் தேதிக்குள் மாநில அரசும், வழக்குதாரர் ரஜினிகாந்த் போரிலேயும் பதில் அளிக்க நோட்டீசு அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











