'காமப் பாட்டு...': கமல், த்ரிஷாவை கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்!
சென்னை: பாலுணர்வைத் தூண்டும் வகையிலும், பண்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்திலும் பாடல் எழுதி பாடிய நடிகர் கமல், த்ரிஷா ஆகியோர் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில அலுவலக செயலாளர் எஸ்.ஆர். குமரவேல் போலீஸ் கமிஷனரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகார் மனுவில்,
"மன்மதன் அம்பு படத்தில் கமல், திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கண்ணோடு என தொடங்கும் பாடலை கமல் எழுதியுள்ளார்.
அந்த பாடல் சி.டி. சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலை கமல் ஆபாசமாக எழுதியுள்ளார். தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் உள்ளன. தமிழ் வேதங்கள் பிரபந்தங்கள் விமர்சிக்கப்பட்டு உள்ளன.
தமிழ் பெண்கள் உயர்வாக போற்றும் வரலட்சுமி நோன்பும் அவமதிக்கப்பட்டு உள்ளது. பாலுணர்வை தூண்டும் வகையில் பாடல் வரிகள் உள்ளன. அரங்கநாதன் கடவுளும் அவமதிக்கப்பட்டுள்ளார். இது இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது.
எனவே கமல், திரிஷாவை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் உதயநிதி, படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடல் படத்தில் இடம் பெறாமல் நீக்க வேண்டும்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











