வீடு... வாடகை.. மிரட்டல்!-விவேக் சோகம்!

நடிகர் விவேக் வீட்டில் வாடகைக்கு குடியேறினார் சுப்ரஜா என்பவர். இவர் ஒரு எழுத்தாளர். இவரை வீட்டைக் காலி செய்யச் சொல்லி பல முறை கூறிவிட்டாராம் விவேக். ஆனால் அவர் காலி செய்ய மறுத்து வருகிறாராம் சுப்ரஜா.
சில மாதங்களுக்கு முன் விவேக்கே நேரில் போய் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே தன்னை மிரட்டுவதாக விவேக் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார் சுப்ரஜா.
இந் நிலையில் நேற்றும் போலீசில் ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளார் சுப்ரஜா. அந்த மனுவில்,
நான் நடிகர் விவேக் வீட்டில் கடந்த நாலரை ஆண்டுகளாக வசித்து வருகிறேன். வீட்டைக் காலி செய்யும்படி கடந்த மார்ச் மாதம் விவேக் சில ரவுடிகளுடன் வந்து என்னை மிரட்டினார். இதுகுறித்து நான் ஏற்கனவே கொடுத்த புகார் மீது விசாரணை நடக்கிறது.
இந் நிலையில் நேற்று நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு விவேக்கின் மனைவி அருள்செல்வி, வக்கீல் மற்றும் சில முகம் தெரியாத ரவுடிகள் வந்து எனது மகனை பிடித்து வெளியே தள்ளினர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து புகைப்படங்கள் எடுத்தனர்.
இதுகுறித்து எனது மகன் என்னிடம் போன் மூலம் தகவல் கூறினான். நான் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன். நான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் நுழைந்து ரவுடித்தனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன், என்று அதில் கூறியுள்ளார்.
விவேக் சோகம்...
இந்த புகாரை கே.கே.நகர் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் விவேக் இதை மறுத்துள்ளார். 'இதென்னங்க அநியாயமா இருக்கு. நாடறிஞ்ச நிலைமையில உள்ள எனக்கே இந்த கதின்னா... என் சொந்த வீட்டை காலி பண்ணச் சொன்னா இப்படியெல்லாம் கிரிமினல்தனமா யோசிக்கிறாங்களேய்யா... முன்ன என் மேல வழக்கு, இப்போ என் மனைவி மேல... நடக்கட்டும்!' என்கிறார் சோகமாக.


Click it and Unblock the Notifications











