76 வயதில் விவாகரத்து கேட்கும் ரஜினியின் முன்னாள் உதவியாளர்!

ரஜினிகாந்திடம் 35 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர் எம்.வி.கிருஷ்ணாராவ். இவரது மனைவி சித்ரா ராஜகுமாரி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 3 மகன்களும் படித்து வெளிநாட்டில் வசிக்கிறார்கள். மகள்களும் திருமணமாகி செட்டிலாகிவிட்டனர். மகன்கள், மகள்கள் அனைவரும் கைவிட்டதால் கிருஷ்ணாராவும், சித்ரா ராஜகுமாரியும் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் வசிப்பதற்கு ரஜினி தன் சொந்த பணத்தில் சென்னையில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் சித்ராவை பிரிந்து கிருஷ்ணாராவ் தனியாக வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணாராவுக்கு ரஜினி பண உதவி செய்து வருகிறார். தள்ளாடும் முதுமையில் அவரால் தனியாக எங்கும் செல்ல இயலவில்லை. இந்த நிலையில் அவர் மனைவி சித்ராவிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணாராவ், சித்ரா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். முதுமை காரணமாக கிருஷ்ணாராவை 2 பேர் சேர்ந்து நீதிமன்றத்துக்கு தூக்கி வந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்டு 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
"கிருஷ்ணா ராவுக்கு 76 வயதாகி விட்டதால் நீதிமன்றத்துக்கு அவரை தூக்கித்தான் வர வேண்டியதுள்ளது. எனவே இந்த விவாகரத்து வழக்கில் விரைவில் தீர்ப்பு கொடுத்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார் கிருஷ்ணாராவின் வழக்கறிஞர் சிவா.
கிருஷ்ணாராவின் பெயரில் உள்ள வீட்டை அபகரிக்க மனைவியின் தரப்பினர் சிலர் முயற்சிப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











