மகனைக் கொல்வதாக மிரட்டல் - கணவர் மீது நடிகை விஜயலட்சுமியின் அக்கா புகார்

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன்னடப் படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பிரண்ட்ஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவரது அக்கா உஷா. இவர், நடிகை ஜெயப்பிரதாவின் தம்பி ராஜ் பாபுவைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
வரதட்சணை கேட்டு ராஜ்பாபுவின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக சென்னை போலீஸில் உஷா புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர்.
இந்த நிலையில் தனது மகன் ராஜமுத்து சாம்ராட்டை கொலை செய்து விடுவேன் என கணவர் மிரட்டுவதாக உஷா புதிய புகாரைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உஷாகொடுத்துள்ள புகாரில், 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு ராஜ்பாபு என்பவருடன் கல்யாணம் நடந்தது.
ஜெய்பிரதா தியேட்டரை ராஜ்பாபு நிர்வகித்து வருகிறார். திருமணத்திற்குப் பின்னர் என்னை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்தார்.
எனது தந்தை அவர்கள் கேட்ட பணத்தையெல்லாம் கொடுத்தும் கூட என்னை தொடர்ந்து கொடுமை செய்து வந்தனர்.
2000மாவது ஆண்டு எங்களுக்கு ராஜமுத்து சாம்ராட் என்ற மகன் பிறந்தான். என்னையும், எனது மகனையும் ராஜ்பாபு அடித்து சித்திரவதை செய்து வந்தார்.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது மகனும் என்னுடன்தான் இருந்து வந்தான்.
இந்த நிலையி்ல எனது மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்ற ராஜ்பாபு, அவனை தன்னுடன் வந்து விடுமாறு கேட்டுள்ளார். எனது மகன் மறுக்கவே, உன்னையும், உனது தாயையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் செல்போனில் பேசி மகனை ஒப்படைக்குமாறு மிரட்டியும் வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் இதேபோல போன் செய்து பேசி எனது மகனைக் கொன்று விடுவேன் என மிரட்டினார்.
இதையடுத்து எனது மகனின் நலன் கருதி அவனை ராஜ்பாபுவுடன் அனுப்பி வைத்தேன். எனது மகனை வாரம் ஒருமுறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என அப்போது கோரினேன். சரி என்று அவரும் சம்மதித்தார். ஆனால் தற்போது மகனைக் காட்ட மறுக்கிறார். போன் செய்தால் பார்க்க முயன்றால் மகனைக் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.
இப்போது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே 8 வயதாகும் எனது மகன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. அவனை மீட்டுத் தர வேண்டும். எனது கணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் உஷா.


Click it and Unblock the Notifications











