twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பை உள்பட நாடு முழுவதும் மை நேம் இஸ் கான் ரிலீஸானது

    By Staff
    |

    Sharukh Khan
    சிவசேனாவால் பெரும் மிரட்டலுக்குள்ளான ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரைக்கு வந்தது. மும்பையிலும் இப்படம் திரையிடப்பட்டது.

    திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல்லாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    மும்பையில் 10 மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் படத்தைத் திரையிட திட்டமிட்டனர். அதேசமயம், ஒரு தியேட்டர் மட்டுமே வைத்துள்ள உரிமையாளர்கள் படத்தைத் திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

    பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மும்பையில் இன்று இப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து ஐனாக்ஸ் மல்டிபிளக்ஸ் வளாகத்திற்கு விரைந்த மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் முதல் காட்சியைப் பார்த்து ரசித்தார்.

    மும்பையில் உள்ள முக்கிய மல்ட்பிளக்ஸ் திரையரங்குகளில் ஷாருக் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்தேரியில் உள்ள பன் ரிபப்ளிக் திரையரங்க வளாகம்தான் முதலில் இப்படத்தை திரையிட்டது.

    அதேபோல ஐனாக்ஸ், பேம் ஆட்லேப்ஸ், பிக் சினிமாஸ், சினிமாக்ஸ் ஆகியவையும் தொடர்ந்து திரையிட ஆரம்பித்தன.

    பன் தியேட்டரில் கல்வீச்சில் ஈடுபட்ட 40 சிவசேனாவினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

    மொத்தம் மும்பையில் 63 திரையரங்குகளில் ஷாருக் படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் சிவசேனா மிரட்டல் காரணமாக ஒற்றை தியேட்டர் உரிமையாளர்கள் பின் வாங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பன் சினிமாஸ் தியேட்டரில் மை நேம் இஸ் கான் படத்தை நடிகை பூஜா பேடி தனது தந்தை கபீர் பேடியுடன் காண வந்தார். ஆனால் ஹவுஸ் புல் ஆகி விட்டதால் அவர் திரும்பிச் சென்றார்.

    இதற்கிடையே, குஜராத்தில் படத்தைத் திரையிட பஜ்ரங் தளம், வி.எச்.பி. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் காலையில் முதல் ஷோ ஓடவில்லை.

    இருப்பினும் பிற்பகலுக்கு மேல் அங்கும் படம் திரையிடப்பட்டது.

    இதேபோல நாட்டின் பிற பகுதிகளிலும் மை நேம் இஸ் கான் திரைக்கு வந்துள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் ஷாருக் கானின் படம் திரைக்கு வந்திருப்பது மகாராஷ்டிர அரசுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாக ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    தற்போது பெர்லினில் இருக்கிறார் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

    துணை ராணுவப் படை வருமா...?

    படம் வெளியானாலும் கூட பதட்டம் தொடருவதால், மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர மாநில அரசுடன் ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரை அனுப்பி வைப்பது தொடர்பாகவும் மாநில அரசுடன், உள்துறை அமைச்சகம் பேசியுள்ளதாக தெரிகிறது.

    உள்துறை அமைச்சகம் தொடர்ந்து நிலையைக் கண்காணித்து வருவதாகவும், மகாராஷ்டிர அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் துணை ராணுவப்படையை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாகவும் உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அதில், சிறப்பு செயலாளர் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X