தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை இந்தத் தேர்தல் சென்னை அண்ணா சாலை பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்தது.
நடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இதில் வாக்களித்தனர். மாலை 6 மணிக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த தேர்தலில் ராம.நாராயணன் தலைமையில் போட்டியிட்ட அணியினர் அத்தனை பேரும் வெற்றிபெற்றார்கள். அவர்களுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:
அன்பாலயா பிரபாகரன் (துணை தலைவர்) - 441
எஸ்.ஏ.சந்திரசேகரன் (துணை தலைவர்) - 391
சிவசக்தி பாண்டியன் (செயலாளர்) - 359
கே.முரளிதரன் (செயலாளர்) - 334
காஜாமைதீன் (பொருளாளர்) - 389
கே.ஆர்.ஜி.க்கு 147 ஓட்டுகள்
எதிர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.ஆர்.ஜி. 147 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். அவருடைய அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோட்டை குமார் 191 ஓட்டுகளும், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பி.எல்.தேனப்பன் 264 ஓட்டுகளும், மாரியப்ப பாபு 14 ஓட்டுகளும், ராதாகிருஷ்ணன் 113 ஓட்டுகளும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பாபுகணேஷ் 180 ஓட்டுகளும் பெற்று தோல்வி அடைந்தார்கள்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் 3-வது முறையாக வெற்றிபெற்ற ராம.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த வெற்றியை கடந்த 2 வருடங்களாக நாங்கள் செய்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். இந்த வெற்றிக்கு காரணம் முதல்வர் கலைஞர்தான். தமிழ்த் திரைபட உலகுக்கு அவர் வழங்கிய சலுகைகள்தான் எங்களை வெற்றி பெற வைத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்கு பாடுபடுவோம்...," என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 21 பேர்களைக் கொண்ட செயற்குழுவுக்கு மொத்தம் 40 பேர் போட்டியிட்டார்கள். இவர்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறும். மாலை 6 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி நீதிபதி சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கான பதவியேற்புவிழா இன்று மாலை 6.30 மணிக்கு பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











