சூர்யா-ஜோதிகா கட்டடம் கட்ட தடை கோரி வழக்கு
சென்னை தி.நகரில் நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும வாங்கியுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் வாங்கிய நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் அசோக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சென்னை தியாகராயநகர், சரவண முதலி தெருவில் சுமார் எட்டரை கிரவுண்டு நிலம் சரவண முதலியாருக்கு சொந்தமானது. இவர் எழுதிய உயில்படி இந்த சொத்துக்கள் அவரது 3 பேரன்களுக்கு போய் சேரவேண்டும். அவரது மறைவுக்கு பிறகு இந்த உயிலும் உயர்நீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அவரது பேரன்களில் ஒருவராகிய அம்பாசங்கரின் மகன் நான். எனது தந்தை இறந்துவிட்டதால், எனது 2 சித்தப்பாக்கள், எங்கள் அப்பாவுக்கு சேரவேண்டிய நிலத்தை விற்று விட்டனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த நிலத்தை வாங்கிய என்ஜினீயரிங் கல்லூரி நிறுவனம் ஒன்று, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோருக்கு விற்றுள்ளது எனக்கு தெரிய வந்துள்ளது.
தற்போது சூர்யா அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த சொத்தில் ஆறில் ஒரு பங்கு எனக்கும் உண்டு. இந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டிருப்பதால் சூர்யாவையும், ஜோதிகாவையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.
மேலும் கட்டுமான பணியை நிறுத்த தடை விதிக்க வேண்டும். இந்த சொத்தில் ஆறில் ஒரு பகுதி எனக்கு உண்டு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
அடுத்தடுத்து இரண்டு முக்கிய நடிகர்கள் நிலம் வாங்கியதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











