twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை சுகன்யாவின் விவாகரத்து வழக்கு-2 மாதத்தில் முடிக்க உத்தரவு-கணவரின் மனு தள்ளுபடி

    By Sudha
    |

    Suganya
    சென்னை: நடிகை சுகன்யாவுக்கும், அவரது கணவருக்கும் வெளிநாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்திருப்பதால், சுகன்யா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கை சென்னை கோர்ட்டிலேயே விசாரிக்கலாம். இந்த வழக்கை 2 மாதத்தில் முடிக்க வேண்டும். அவரது கணவர் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    நடிகை சுகன்யாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த, அமெரிக்க குடியுரிமை பெற்றவரான ஸ்ரீதரன் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள பாலாஜிகோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

    கல்யாணம் ஆன கையோடு கணவருடன் குடித்தனத்தை ஆரம்பித்த சுகன்யா 2003ம் ஆண்டே சென்னை திரும்பினார். வந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். சுகன்யா மீண்டும் அமெரிக்காவுக்குப் போகவில்லை.

    இந்தச் சூழ்நிலையில் 2004ம் ஆண்டு விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டை அணுகினார் சுகன்யா. ஆனால் இதுகுறித்து ஸ்ரீதரனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கோர்ட்டும் சம்மன் ஏதும் அனுப்பவில்லை. இந்த நிலையில் 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி சுகன்யாவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.

    இது தெரியவந்ததும் அதே கோர்ட்டில் ஸ்ரீதரன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து விவாகரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஸ்ரீதரன்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள என் தொடர்பான விவாகரத்து வழக்கை, சென்னையில் உள்ள குடும்பநல கோர்ட்டு விசாரிக்க அதிகார வரம்பு இல்லை. அமெரிக்காவில் வசிப்பவர்களின் வழக்கை இந்தியாவில் உள்ள கோர்ட் விசாரிக்க முடியாது. எனவே எனது விவாகரத்து வழக்கை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.

    இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சுகன்யாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், கணவரை விட்டுவிட்டு வந்து எந்த இடத்தில் பெண் வசிக்கிறாரோ, அந்த இடத்தில் உள்ள கோர்ட்டில் அந்தப் பெண் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர முடியும். கணவர் வசிக்கும் இடத்தைப் பற்றி பரிசீலிக்கத் தேவையில்லை. ஸ்ரீதரன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிபே தர்மாராவ், கே.கே.சசிதரன் அளித்த தீர்ப்பில்,

    இந்து திருமண முறைச் சட்டங்களின் அடிப்படையில் நடக்கும் திருமணங்களை இந்தியாவில் உள்ள கோர்ட்டுகள் விசாரிக்கின்றன. இந்தச் சட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் உள்ள கோர்ட்டுகளில் நடிகை சுகன்யா வழக்கு தொடர முடியாது. இந்து முறைப்படி நடிகை சுகன்யாவின் கழுத்தில் ஸ்ரீதரன் எப்போது தாலி கட்டினாரோ, அப்போதே அந்த திருமண விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அதிகார வரம்பு கொண்ட கோர்ட்டும், அந்த சட்டங்களின்படியே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

    இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளதால், அதற்கான இந்து திருமண முறை சட்டப் பிரிவு 13-ன் அடிப்படையில்தான் திருமண பிரச்சினைகளும் தீர்க்கப்பட முடியும். இந்தச் சட்டத்தின்படி, நியூஜெர்சியில்தான் நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று ஸ்ரீதரன் கூறவில்லை. அதுபற்றி அந்த சட்டப் பிரிவிலும் தெரிவிக்கப்படவில்லை.

    எனவே, நியூஜெர்சி கோர்ட்டில் விவாகரத்து கேட்டு நடிகை சுகன்யா வழக்கு தொடரவில்லை. அப்படி வழக்கு தொடரவும் முடியாது. ஆனால் ஸ்ரீதரன் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்றிருக்கிறார். அவருக்கும் சென்னை குடும்பநல கோர்ட்டு எல்லைக்கு உட்பட்டுள்ளார்.

    எனவே, கணவர் அமெரிக்காவில் வசிப்பவர் என்றாலும், அவரது மனைவியான நடிகை சுகன்யா தொடர்ந்த விவாகரத்து வழக்கை விசாரிப்பதற்கு சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு அதிகார வரம்பு உள்ளது. ஸ்ரீதரனின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    2004-ம் ஆண்டில் இருந்து இவர்களின் விவாகரத்து விவகாரம் நிலுவையில் உள்ளது. எனவே இன்னும் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி குடும்பநல கோர்ட்டுக்கு உத்தரவிடப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X