ரஜினி பட ஷூட்டிங்கால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி

சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியில் பிரமாண்ட உள்வட்டச் சாலை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பாலத்தில் வைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க விரும்பியுள்ளார் எந்திரன் பட இயக்குநர் ஷங்கர்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினிகாந்த்தை போலீஸார் துரத்துவது போலவும், அவர்களை ரஜினிகாந்த் மெஷின் கன்னால் சுட்டுத் தள்ளுவது போலவும் காட்சி.
படப்பிடிப்பு நடந்த பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதி. அதிக அளவில் வாகனப் போக்குவரத்து நடைபெறும் இடமான அந்த சாலையில், படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட போலீஸ் வாகனங்களை கவிழ்த்துப் போட்டு வைத்திருந்தனர். மேலும் ராட்சத கிரேன்களையும் கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர்.
இதனால் அங்கு சாலைப் போக்குவரத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டது. இது போதாதென்று ரசிகர்களும் பெருமளவில் திரண்டு விட்டதால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது.
அருகில் உள்ள பைபாஸ் சாலையிலும் வாகனங்கள் ஆங்காங்கு தடைபட்டு நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல மணி நேரம் கழித்த பின்னரே போக்குவரத்து சகஜ நிலையை அடைந்தது.


Click it and Unblock the Notifications











