13 Years Of Goat Mankatha: எனக்கு சி.எம் ஆகனும்னு ஆசையில்லை - அஜித்குமார் பளீச்
சென்னை: தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில் காலத்தால் பேசப்படும் படங்கள் என்ற வகையில் லிஸ்ட் எடுத்தாலும் சரி, கதாநாயக முக்கியத்துவத்திற்கான படங்களை வரிசைப்படுத்தினாலும் சரி, திரைக்கதைக்காக படங்களை பட்டியலிட்டாலும் சரி, வில்லனிசத்துக்காக, பின்னணி இசைக்காக , சண்டைக் காட்சிகளுக்காக என படங்களை லிஸ்ட் போட்டால், இந்த லிஸ்ட்கள் அனைத்திலும் மங்காத்தா திரைப்படம் இடம் பெறும். இந்தப் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் அதாவது 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் 13 ஆண்டுகள் ஆகின்றது. இணையம் பெரிதாக வளராத காலத்திலேயே, மங்காத்தா படத்தின் வெற்றி குறித்து பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. அப்படியான நிலையில், இணையம் வளர்ந்து உச்சத்தில் இருக்கு இந்த காலத்தில் ரசிகர்கள் இணையத்தில் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் அஜித்குமாரின் திரை வாழ்க்கையில் இந்தப் படம் 50வது படம். படத்தினை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்தில், த்ரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா மற்றும் ராய் லட்சுமி என மொத்தம் நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். அஜித் மட்டும் இல்லாமல், படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், வைபவ், பிரேம் ஜி, மகத், அரவிந்த் ஆகாஷ், ஜெயபிரகாஷ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்தது மட்டும் இல்லாமல், விருதுகளை வாரிக் குவித்தது. படத்தின் சிறந்த பின்னணி இசை இன்றைக்கும் தமிழ் சினிமா மகுடத்தில் மாணிக்கமாக உள்ளது.

ரீ ரிலீஸ்: 2011ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் இன்றைக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், படத்தினை ரீ ரிலீஸ் செய்யச் சொல்லியும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டு உள்ளனர். தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அவர்களின் திரை வாழ்வில் மைல் கல் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததில்லை. ஆனால் அஜித்திற்கு அவரது 25வது படமான அமர்க்களம் படமும், 50வது படமான மங்காத்தா படமும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்த இரண்டு படங்களிலும் நெகடிவ் ஷேட் இருக்கும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.

சிம்பு: படத்தினைப் பார்க்க நடிகரும் அஜித் குமாரின் வெறித்தனமான ரசிகராகவும் இருந்த நடிகர் சிம்பு, மைசூரில் நடந்து கொண்டு இருந்த தனது ஒஸ்தி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து, சத்யம் தியேட்டரில் படம் பார்த்தார். படத்தின் இடைவேளைக் காட்சியில் பேட்டி கொடுத்த சிம்பு, படம் நாம் எதிர்பார்த்ததைவிடவும், பல மடங்கு மாஸாக உள்ளது என கூறினார். இப்படி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் கொண்டாடிய மங்காத்தா படத்தில் நடித்தபோது அஜித் பேசியது குறித்து வெங்கட் பிரபு படத்தின் ரிலீஸுக்கு பின்னர் பேசியுள்ளார்.

சி.எம் & விஜய்: அதில், படத்தில் கெட்ட வார்த்தைகள் பேசனும் அதனால் உங்களுக்கு எதுவும் பிரச்னை இல்லையே என்பதுபோனற கேள்விக்கு, வெங்கட் நான் நடிகன், நல்ல நடிகன்னு பேரு வாங்னும்னு நினைக்கிறேன். எனக்கு சி.எம். ஆகனும்னு எல்லாம் ஆசை இல்லை எனக் கூறியதாக வெங்கட் பிரபுவே தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதேபோல், இந்தப் படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்திருந்தால் நான் கட்டாயம் நடித்திருப்பேன் என நடிகர் விஜய் கூறியதாக வெங்கட் பிரபு கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











