ஹீரோ 'கட்அவுட்'களுக்கு பாலாபிஷேகம் எதுக்கு? - பாரதிராஜா பரபரப்பு பேச்சு
மதுரை: சினிமா ஹீரோக்களின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, ஆரத்தி எடுப்பது போன்ற வேலைகளில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்று இளைஞர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா அறிவுரை கூறியுள்ளார்.
மதுரை யாதவா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்,
'சினிமாவுக்கு செல்லுங்கள். சந்தோஷப்படுவதற்கும், ரசிப்பதற்கும் மட்டும் சினிமாவுக்கு செல்லுங்கள். உங்களை சந்தோஷப்படுத்துவதற்கு சினிமா ஒரு நல்ல சாதனம்.
ஆனால் ஹீரோக்களையோ, ஹீரோயின்களையோ கடவுள் போல வழிபடுவதை நீங்கள் செய்வது ஏற்கத்தக்கதல்ல.
ஒரு புதுப்படம் வந்தால், அந்த படத்தின் கதாநாயகனின் கட் அவுட்டை திரையரங்க வாசலில் நிறுத்தி வைத்து அதற்கு பாலாபிஷேம் செய்வது, ஆரத்தி எடுப்பது போன்ற வேலைகளில் எல்லாம் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.
மாணவர்களுக்கு கல்வி என்பது அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான சாதனம். அதேபோல, உங்களுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் நாட்டியம், இசை, நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்துவது தான் கலை.
எனவே கலையை கலையாக இளைஞர்கள் பார்க்கவேண்டும்' என்றார்.


Click it and Unblock the Notifications











