இளையராஜா அண்ணன் மகன் சொத்து வழக்கு தள்ளுபடி!

கோயம்பேட்டில் இனாம் எஸ்டேட் என்ற 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதற்கு உரிமை கொண்டாடி இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் அவர், "கோயம்பேட்டில் இனாம் ஸ்டேட் என்ற பெயரில் 4.7 ஏக்கர் நிலம் வேதாம்மாள் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. அந்த நிலத்தை எனது தந்தை ஆர்.டி. பாஸ்கருக்கு பவர் பத்திரம் மூலம் எழுதி கொடுத்து இருந்தனர். எனது தந்தை மறைவுக்கு பிறகு வாரிசு அடிப்படையில் அந்த சொத்து எனக்கு வர வேண்டும்.
இதற்காக பட்டா கேட்டு விண்ணப்பித்தபோது இதற்கான செட்டில்மென்ட் அதிகாரி பட்டா தாராமல் மனுவை தள்ளுபடி செய்து விட்டார். எனது பெயருக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்", என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வினோத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் பாலகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்தார்.
தனது தீர்ப்பில், "1952-ம் ஆண்டிலேயே இந்த சொத்து தொடர்பாக திருமங்கலம் ஜமீன்தார் வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்போது 42 ஆண்டுகள் கழித்து இதற்கு பட்டா கேட்பதை ஏற்க முடியாது. எனவே தள்ளுபடி செய்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











