பண மோசடியில் ஈடுபட்ட டுபாக்கூர் சினிமா இயக்குநர் கைது
சென்னை: படம் எடுப்பதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த திரைப்பட இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
தேனாம்பேட்டை அபிபுல்லா ரோட்டில் மிராவிஷன் என்ற பெயரில் சினிமா இன்ஸ்டிடியூட் ஒன்று உள்ளது. இதனை நடத்தி வருபவர் அரவிந்த் ஜி.மேத்தா. இவரது சொந்த ஊர் மணப்பாறை.
இவர் நடத்தி வந்த திரைப்படக் கல்லூரியில், நடிப்பு, நடனம், கதை எழுதுதல், திரைக்கதை அமைத்தல் மற்றும் சினிமா தொடர்பான பயிற்சிகளை கற்று கொடுக்கிறார். 2 மாதம் பயிற்சி பெற ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார். பெண்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்படுமாம்.
நூற்றுக்கணக்கானோர் இங்கு பயின்று வருகின்றனர். இங்கு படித்த சிலருக்கு டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தததாம்.
இந்த நிலையில் நிலவே வருக என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தார் மேத்தா. இதற்கு நாயகன் நாயகி தேவை என்று விளம்பரம் செய்தார்.
இதையடுத்து ரீட்டா என்கிற ராணுவ பெண் அதிகாரி மேத்தாவைத் தொடர்பு கொண்டார். தனது மகளை நாயகியாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சரி என்று ஒப்புக் கொண்ட மேத்தா, அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்தைக் கறந்துள்ளார்.
இதேபோல, மூதாட்டி ஒருவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை வசூலித்துள்ளார். இவரது மோசடியில் பார்வையற்ற ஒருவரும் சிக்கி ரூ. 20 ஆயிரத்தை இழந்தார்.
இப்படி பலரிடம் பணத்தை மோசடியாக கறந்துள்ளார். இப்படியாக கிட்டத்தட்ட ரூ. 16 லட்சம் வரை வசூலித்துள்ளார் மேத்தா. பின்னர் பூஜை என்ற பெயரில் ஒன்றை நடத்தி சில காட்சிகளையும் எடுத்தார். பின்னர் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்.
சந்தேகம் வந்த ரீட்டா தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கவே இழுத்தடிக்க ஆரம்பித்தார் மேத்தா. இதையடுத்து போலீஸுக்குப் போய் விட்டார் ரீட்டா.
இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோசடி இயக்குநர் மேத்தாவைக் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











