டிவி நடிகர், மனைவி போலீசில் தஞ்சம்
சென்னை: கொலை செய்துவிடுவதாக பெற்றோர் மிரட்டுவதால் பாதுகாப்பு கேட்டு டிவி நடிகருடன் அவரது மனைவி போலீசில் தஞ்சமடைந்துள்ளார்.
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் 'பந்தம்' என்ற தொடரில் இன்ஸ்பெக்டர் வேடம் உள்பட சிறு வேடங்களில் நடித்து வருபவர் ஜீவன் (25). சினிமாவிலும் நடித்துள்ளார். குமரி மாவட்டம் புத்தன்துரை கிராமத்தை சேர்ந்த ஜீவனின் நிஜப்பெயர் கெஜீத்.
கல்லூரியில் தன்னுடன் படித்த ஜெசியா (22) என்ற பெண்ணை அவரது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். சென்னை போரூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
ஜெசியா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவர் ஜீவனுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த ஜெசியா தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார்.
மனுவில், ஆரம்பத்தில் இருந்தே எங்கள் காதலை ஏற்றுக்கொள்ளாத என் பெற்றோர் தினமும் போனில் மிரட்டி வருகின்றனர். என் கணவரை கொன்று விடுவதாகவும், என்னை கடத்தி வந்ததாக அவர் மீது பொய் புகார் கொடுத்து சிறையில் அடைக்கப் போவதாகவும் மிரட்டுகின்றனர்.
இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொண்டோம். எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











