சூர்யா, அசின் படங்கள் வெளியாவதில் சிக்கல்!
சூர்யா நடித்த ரத்த சரித்திரம் மற்றும் அசின் - சல்மான்கான் நடித்த ரெடி ஆகிய படங்களை தமிழகத்தில் திரையிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தக்கம் காட்டி வருவதால், அந்தப் படங்களை இதுவரை எந்த விநியோகஸ்தரும் வாங்கவில்லை.
எனவே இந்தப் படங்களை திரையிடுவதா புறக்கணிப்பதா என்பது குறித்து முடிவு செய்ய திரைப்பட சங்கங்களின் கூட்டுக் குழு விரைவில் கூடுகிறது.
ராஜபக்சே அரசு தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விழாவுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட சங்கங்கள் தடை விதித்தன. மீறி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
தமிழ் நடிகர்- நடிகைகள் ஒட்டுமொத்தமாக இவ்விழாவைப் புறக்கணித்தனர். விழாவின் தூதராக இருந்த அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றோரும் திரைப்பட அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று விழாவுக்குச் செல்லவில்லை.
ஆனால் சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன், விவேக் ஒபராய் போன்றோர் இதனை உதாசீனம் செய்துவிட்டு இலங்கை படவிழாவில் பங்கேற்றனர். இதையடுத்து ஹிரித்திக்ரோஷன் நடித்து தமிழகத்தில் ஓடிக்கொண்டிருந்த கைட்ஸ் படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.
அடுத்து விவேக் ஒபராயின் ரத்தசரித்திரா, சல்மான்கானின் ரெடி படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. இவ்விரு படங்கள் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரத்த சரித்திரா படம் தமிழ், இந்தியில் தயாராகி உள்ளது. இதில் சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.
ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக அசின் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என அசினை தமிழ் அமைப்புகள் வற்புறுத்தின. ஆனால் அதையும் மீறி படப்பிடிப்புக்கு அவர் சென்றார். ராஜபக்சே மனைவியுடன் தமிழர் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இலங்கை அரசின் கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறி அறிக்கைகள், பேட்டிகள் அளித்தார்.
அவருக்கு நடிகர் சங்க பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
இவ்விரு படங்களும் தமிழகத்தில் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படங்களை தமிழகத்தில் திரையிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
தியேட்டர் அதிபர்கள் செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் இதுபற்றி கூறும்போது, 'அனைத்து திரைப்பட அமைப்புகளின் கூட்டுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இப்பிரச்சினை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதில் ஒருமனதாக எடுக்கப்படும் முடிவை திரையரங்க உரிமையாளர் சங்கம் அமுல்படுத்தும்', என்றார்.


Click it and Unblock the Notifications











