twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னி ஜெயந்த்துக்கு ரஜினி கொடுத்த நாயை திருடிய மாணவர் கைது- நாய் மீட்பு

    By Sudha
    |

    Chinni Jayanth
    நடிகர் சின்னி ஜெயந்த்துக்கு ரஜினிகாந்த் அன்புப் பரிசாக கொடுத்த நாயை ஒரு மாணவர் திருடிக் கொண்டு போய் விட்டார். போலீஸார் தீவிரமாக செயல்பட்டு அந்த நபரைப் பிடித்து நாயை பத்திரமாக் மீட்டு சின்னியிடம் ஒப்படைத்தனர்.

    சின்னிஜெயந்த், சென்னை மைலாப்பூர் பீமண்ண கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். பக் ரக ஆண் நாயை இவர் வளர்த்து வந்தார். இந்த நாய், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று காணாமல் போய்விட்டது. இந்த நாயை ரஜினிகாந்த், சின்னிக்கு அன்புப் பரிசாக கொடுத்திருந்தாராம். இதனால் கவலையில் ஆழ்ந்தார் சின்னி.

    மயிலாப்பூர் போலீஸில் தனது நாய் திருட்டு போனது குறித்து அவர் புகார் கொடுத்தார். களத்தில் இறங்கிய போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சின்னியும், நாயின் புகைப்படம் அடங்கிய போஸ்டரை தயாரித்து அதில் தனது செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு நாய் குறித்த தகவல் தந்தால் பரிசு தரப்படும் என அறிவித்தார்.

    போஸ்டரைப் பார்த்த மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுவன் நாய் குறித்த தகவலை போலீஸாருக்குத் தெரிவித்தான். இதையடுத்து நாய் வைக்கப்பட்டிருந்த மந்தைவெளியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீஸார் விரைந்து சென்று நாயை மீட்டனர்.

    போலீஸ் நடத்திய விசாரணையில், மணி என்ற பத்தாம் வகுப்பு மாணவர் நாயைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து நாயை திருடியதற்காக மணியை போலீஸார் கைது செய்தனர்.

    முன்னதாக இது தனது நாய் என்று மணி பிடிவாதமாக கூறினாராம். இதையடுத்து யோசித்த போலீஸார், மணியையும் சின்னியையும் அருகருகே நிற்க வைத்தனர். நாயைக் கொண்டு அவர்கள் முன்பு நிறுத்தியபோது, நாய் சின்னியை நோக்கி பாய்ந்து சென்று அவர் மீது ஏறி விளையாடியது.

    ஆனால் மணி நாயை கூப்பிட்டபோது அது வரவில்லை மாறாக குரைக்க ஆரம்பித்தது. இதன் மூலம் நாயின் உரிமையாளர் சின்னிதான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

    காணாமல் போன நாய் திரும்பி வந்த சந்தோஷத்தில் சின்னி அழுது விட்டார். எனது பையன் கிடைத்து விட்டான் என்று சத்தம் போட்டு கத்தினார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த நாயை கடந்த ஓராண்டுக்கு முன்பு பரிசாகக் கொடுத்தார். ஸ்பார்க் என்று பெயர் சூட்டி எனது குழந்தையைப் போல ஆசையோடு வளர்த்தேன். மிகவும் புத்திசாலித்தனமான இந்த நாய் காணாமல் போனது எனக்கு குழந்தையே காணாமல் போனது போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது என்றார் நெகிழ்ச்சியுடன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X