வெடிவிபத்து அபாயம்-லண்டன் ஹோட்டலிலிருந்து அமிதாப் பச்சன் வெளியேற்றம்

இதை அமிதாப் பச்சன் ட்விட்டர் தகவல் மூலம் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் கோர்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார் அமிதாப் பச்சன்.
இந்த நிலையில் முதலில் அவர் தனது ட்விட்டர் தளம் மூலம் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நான் தங்கியுள்ள லண்டன் ஹோட்டலில் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடும் குளிரில் அனைவரும் வெளியே நிற்கிறோம். அடுத்த கட்டடத்தில் வெடிவிபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. நான் எனது காரில் ஏறி அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளேன். கட்டடத்திற்கு அருகே யாரையும் போக விடவில்லை என்று கூறியிருந்தார்.
சற்று நேரத்தில் இன்னொரு தகவலை அவர் வெளியிட்டார். அதில், ஹோட்டலில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றியுள்ளனர். தீவிரவாத மிரட்டல் எதுவும் இல்லை. அடுத்த கட்டடத்தில் கட்டுமான் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு வைத்திருந்த அவசர கால ஜெனரேட்டர் மழை காரணமாக வெடிக்கும் நிலையில் இருந்தது. அப்படி நடந்தால் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் இடத்தில் இருந்த ராட்சத கிரேன்கள் ஹோட்டல் மீது விழக் கூடிய அபாயம் இருந்ததால், அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கிரேன் விழுந்தால் ஹோட்டலே நொறுங்கிப் போயிருக்கக் கூடும். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நான் பத்திரமாக இருக்கிறேன். மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பவுள்ளேன் என்று கூறியிருந்தார் அமிதாப்.
கடந்த சனிக்கிழமை அமிதாப் பச்சன் லண்டன் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











