இங்கே எழவு-எதிர் வீட்டில் விருந்து: சீமான்

நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுகூட்டம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்று இரவு நடந்தது. சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பாவணன், அரசு அமல் ராஜ் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசுகையில்,
பிரபாகரன் தமிழகத்தில் யாருடைய உயிரையும் கேட்கவில்லை. நம்முடைய உணர்வை அவர் எதிர்பார்க்கிறார். என் வீட்டில் எழவு, எதிர் வீட்டில் விருந்து என இருக்கும் ஒரு தேசத்தில் எங்கே இருக்கிறது இறையாண்மை, முல்லை பெரியாரில் தண்ணீர் தர மறுப்பவர்களும், காவிரியில் தண்ணீர் தர மறுப்பவர்களும்தான் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள்.
தமிழகத்தில் எழுத்து சுதந்திரம் இருக்கிற அளவுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. எம்ஜிஆரின் கனவு தமிழ் ஈழமாகும். அதை அடைய துடிக்கும் நாங்கள் தான் உண்மையான அதிமுகவினர். ராஜபக்சே தமிழ் பெண்களை கடத்தி அவர்களது கருவை கலைக்கிறார். கருவில் இருக்கும் தமிழ் குழந்தையை கண்டு கூட சிங்களர்கள் பயப்படுகிறார்கள்.
இதை பேசுகின்ற சீமானை சிறையில் அடைக்கின்றனர். தமிழ் ஈழம் மலரும் வரை நான் பேசுவேன். அடிமையாக வாழ்வதை விட வீரமாக சாவதே மேல் என்பதை ஈழத்தமிழன் உணர்ந்து போராடுகிறான். எனக்கு சினிமா வருமானத்தை விட இனமானமே பெரிதானது.
இக்கூட்டத்தில் பேராசிரியர் அறிவழகன் தொ.பரமசிவம், வக்கீல்கள் ராசாசிங், தங்கசாமி, பாலகணேசன், இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அவர் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











